வாஷிங்டன் : அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் பணிநீக்கங்கள், அங்கு பணிபுரியும் இந்திய IT ஊழியர்கள் மத்தியில் பெரிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக H-1B விசாவில் அமெரிக்காவில் வேலை செய்து வரும் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் தற்போது வேலை மட்டுமல்ல, தங்களது குடியுரிமை நிலை குறித்தும் கவலையில் உள்ளனர்.
மெட்டா, அமேசான், லிங்க்ட்இன் உள்ளிட்ட பெரிய நிறுவனங்களில் சமீபமாக நடந்த layoffs காரணமாக பல இந்திய தொழில்நுட்ப பணியாளர்கள் வேலை இழந்துள்ளனர். அமெரிக்க குடியேற்ற விதிகளின்படி, H-1B விசாவில் இருப்பவர்கள் வேலை இழந்த பிறகு 60 நாட்களுக்குள் புதிய நிறுவனத்தில் வேலை பெற்று sponsorship பெற வேண்டும். இல்லையெனில் அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்படும்.
இந்த 60 நாள் அவகாசம் பொதுவாக பணியாளரின் கடைசி வேலை நாளிலிருந்து கணக்கிடப்படுகிறது. இதனால் வேலை இழந்த பல இந்தியர்கள் தற்போது கடும் அழுத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
குறிப்பாக, Green Card விண்ணப்பம் நிலுவையில் உள்ளவர்கள், வீட்டு கடன் கட்டுபவர்கள், குழந்தைகளை அமெரிக்க பள்ளிகளில் படிக்க வைத்து வருபவர்கள் மற்றும் அங்கேயே நீண்டகாலமாக குடியேற திட்டமிட்டிருந்த குடும்பங்கள் அதிகமான பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.
வேலை இழந்த சிலர், புதிய வேலை கிடைக்கும் வரை அமெரிக்காவில் தங்குவதற்காக B-1 அல்லது B-2 Visitor Visa-வுக்கு மாற முயற்சி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இதுபோன்ற விண்ணப்பங்களை அமெரிக்க குடியேற்ற அதிகாரிகள் தற்போது தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
Layoffs.fyi வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த ஆண்டில் மட்டும் உலகம் முழுவதும் 1.10 லட்சத்திற்கும் அதிகமான தொழில்நுட்ப ஊழியர்கள் வேலை இழந்துள்ளனர். அதிலும் H-1B விசா பெறுபவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்களாக இருப்பதால், இந்த layoffs-னால் அதிகமாக பாதிக்கப்படுவது இந்தியர்கள்தான் என கூறப்படுகிறது.
இதற்கிடையில், Artificial Intelligence மற்றும் Automation மீது தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிக முதலீடு செய்ய ஆரம்பித்திருப்பதும் வேலை வாய்ப்புகளில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. Meta நிறுவனம் மட்டும் இந்த ஆண்டு AI தொடர்பான திட்டங்களுக்கு 100 பில்லியன் டாலருக்கும் அதிகமாக முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
AI வளர்ச்சி காரணமாக எதிர்காலத்தில் hiring குறையலாம் என்ற அச்சமும் IT ஊழியர்கள் மத்தியில் உருவாகியுள்ளது. “வேலை இல்லாமல் சில மாதங்கள் கூட இருக்க முடியாத சூழல் H-1B விசா ஊழியர்களுக்கு உள்ளது” என்று பலர் வேதனை தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையில், Blind என்ற தளத்தில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், அமெரிக்காவில் வேலை இழந்தால் இந்தியாவுக்கு திரும்ப தயாராக இருப்பதாக சுமார் பாதி இந்திய IT ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். மற்றவர்கள் கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் புதிய வாய்ப்புகளை தேடி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
