அமெரிக்காவில் புதிய விதிமுறைகள்: மக்கள் போராட்டம்.., 700 கடற்படை வீரர்களை இறக்கிய டிரம்ப்.!
அமெரிக்கா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சட்டவிரோத குடியேறிகள் போராட்டம் நான்காவது நாளாக நீடித்து வருகிறது.

லாஸ் ஏஞ்சல்ஸ் : அதிபர் டொனால்ட் டிரம்ப், 2025-ஆம் ஆண்டு தனது இரண்டாவது பதவிக் காலத்தில், அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசிப்பவர்களை விரைவாக நாடு கடத்துவதற்கு, குடியேற்ற மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவு (ICE) அதிகாரிகளுக்கு அதிக அதிகாரம் வழங்கப்பட்டது.
அந்த உத்தரவின்படி, லாஸ் ஏஞ்சல்ஸில் ICE அதிகாரிகள் பெரிய அளவிலான சோதனைகளை நடத்தினர். இதில், வீடுகள், பணியிடங்கள் மற்றும் பொது இடங்களில் புலம்பெயர்ந்தோரை கைது செய்து, ஆவணங்கள் இல்லாதவர்களை உடனடியாக நாடு கடத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த நடவடிக்கைகள், குடும்பங்களை பிரிப்பதாகவும், மனித உரிமைகளை மீறுவதாகவும் குற்றம்சாட்டப்பட்டன. இது குறிப்பாக அமெரிவிக்காவில் குடியேறிய லத்தீன் அமெரிக்க, ஆசிய, மற்றும் ஆப்பிரிக்க சமூகத்தினர் கைது நடவடிக்கைக்கு எதிர்த்து குரல் கொடுத்தனர். இதனையடுத்து, புலம்பெயர்ந்தோர் உரிமைகளை ஆதரிக்கும் அமைப்புகள், சமூக ஆர்வலர்கள், மற்றும் உள்ளூர் மக்கள், ICE நடவடிக்கைகளை எதிர்த்து போராட்டங்களை தொடங்கினர்.
அமெரிக்கா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சட்டவிரோத குடியேறிகள் போராட்டம் நான்காவது நாளாக நீடித்து வருகிறது. குடியேற்ற விதியின் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து தேசிய பாதுகாப்பு படையினருடன் போராட்டக்காரர்கள் பல இடங்களில் மோதலில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
போராட்டங்கள் முதலில் அமைதியாக இருந்தாலும், மூன்றாம் நாளில் சில இடங்களில் வன்முறையாக மாறியது. போராட்டக்காரர்கள் கற்கள், பாட்டில்கள், மற்றும் பட்டாசுகளை வீசினர். 3வது நாளான நேற்றைய தினம், நடைபெற்ற இந்த போராட்டத்தில் கடைகள், வாகனங்கள், வணிக நிறுவனங்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்து நாசம் செய்யப்பட்டன.
இதற்கு பதிலடியாக, காவல்துறை ரப்பர் தோட்டாக்கள், கண்ணீர்ப்புகை குண்டுகள், மற்றும் மிளகு தெளிப்பான்களை பயன்படுத்தியது. இதனால், பலர் காயமடைந்தனர், சிலர் கைது செய்யப்பட்டனர். தற்பொழுது, கலவரத்தை முன்னின்று நடத்திய 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்ட நிலையில், நேற்று 700 கடற்படை வீரர்கள் கலிபோர்னியா உள்ளே அனுப்பப்பட்டதாகவும், இந்த வாரத்தில் 2000 வீரர்கள் அனுப்ப வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், டிரம்பின் இந்த முடிவு அரிசியால் ரீதியாக பெரிதும் விமர்சிக்கப்படுகிறது.