இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயார்! அழைப்பு விடுத்த பாக் பிரதமர்!
காஷ்மீர் பிரச்சினை மற்றும் நீர் பிரச்சினை உட்பட அனைத்து சர்ச்சைகளையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க விரும்புகிறோம் என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் : பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தயாராக இருப்பதாக தெஹ்ரானில் ஈரான் அதிபருடனான சந்திப்பின்போது தெரிவித்திருக்கிறார். காஷ்மீர் விவகாரம், பயங்கரவாதம், சிந்து நதி நீர் பங்கீடு மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட அனைத்து முக்கியப் பிரச்சினைகளையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க விரும்புவதாகவும் அவர் பேசியிருக்கிறார்.
இது குறித்து பேசிய அவர் ” காஷ்மீர், பயங்கரவாதம், சிந்து நதி நீர் பங்கீடு மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட அனைத்து சர்ச்சைகளையும் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க நான் விரும்புகிறேன். பயங்கரவாதம் என்பது இரு நாடுகளுக்கும் பொதுவான அச்சுறுத்தல் எனவே, இதனை எதிர்கொள்ள இந்தியாவுடன் இணைந்து செயல்பட பாகிஸ்தான் தயாராக இருக்கிறோம்.
இந்தியா மட்டுமில்லை பாகிஸ்தானும் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரச்சினையை அரசியலாக்காமல் ஒருங்கிணைந்து தீர்க்க வேண்டுமெனவும் குறிப்பிட்டார். அனைத்து சர்ச்சைகளையும் உள்ளடக்கிய விரிவான பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் தயாராக இருப்பதாகவும், இதற்கு அமெரிக்கா, பிரிட்டன், துருக்கி, கத்தார் மற்றும் ஐ.நா.வின் ஆதரவு உள்ளதாகவும் கூறினார். சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை வெற்றியாகக் கருதிய அவர், அமைதி வழியில் முன்னேற விரும்புவதாகவும் தெரிவித்தார்.
மேலும், இந்தியாவுடன் இணைந்து இந்த ஆபத்தை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக கூறியது மட்டுமின்றி மேலும், இந்தியாவுக்கு விருப்பம் இல்லையெனில், பாகிஸ்தான் மற்ற உலகளாவிய கூட்டாளிகளுடன் இணைந்து செயல்படும் என்று தெரிவித்தார்.
ஏற்கனவே,காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் ஏற்பட்ட நிலையில், அமைதி பேச்சுவார்த்தை மூலம் நிறுத்தப்பட்டது. எனவே, இரு நாடுகளுக்கு இடையே சமீபத்தில் ஏற்பட்ட பதற்றங்களுக்கு மத்தியில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இப்படி பேசியிருப்பது அமைதியை மேம்படுத்துவதற்கான ஒரு முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.