நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி புதிய கட்சியை தொடங்கிய நடிகர் மன்சூர் அலிகான்.!

Mansoor Ali Khan, who was in Seeman's Naam Tamilar Party till now, has abruptly left the party and started a new party.

சீமானின் நாம் தமிழர் கட்சியில் இதுவரை இருந்த மன்சூர் அலிகான் திடீரென அக்கட்சியில் இருந்து விலகி புதிய கட்சியை தொடங்கியுள்ளார்.

சீமானின் நாம் தமிழர் கட்சியில் இதுவரை இருந்த மன்சூர் அலிகான், இன்று தனது கட்சியின் பெயரை அறிவிக்க இருப்பதாகவும் தனது அலுவலகத்தில் நடைபெறும் பத்திரிகையாளர் சந்திப்பில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்பட்டு வந்த நிலையில், நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி, தமிழ்த் தேசிய புலிகள் கட்சி என்ற தனி கட்சியை மன்சூர் அலிகான் தொடங்கியுள்ளார்.

புதிய கட்சியை தொடங்கியபின் செய்தியாளர்களிடம் பேசிய மன்சூர் அலிகான், காலத்தின் கட்டாயமாகவும், தேவைக்காகவும் தமிழ் தேசிய புலிகள் கட்சி என்ற அமைப்பை தமிழர்களின் உறுதுணையோடு தொடங்குகிறேன். தமிழகத்தில் தமிழர்களுக்கே வேலை என்றும் மத்திய மாநில அரசு எந்த பணிகள் இருந்தாலும், தமிழர்களுக்கு கொடுக்க வேண்டும். அனைத்து வளங்களும் காப்பற்றப்பட வேண்டும் என கூறியுள்ளார்.

இந்த மண்ணை மீட்க, மத்திய அரசின் கொடூரமான சட்டங்களால் தமிழ் மக்கள் தாக்கப்பட்டு, கார்ப்பரேட் நிறுவனங்கள் நமது மண்ணை பிடித்து சூறையாடிக்கொண்டு இருக்கிறார்கள். அதை தடுத்து நிறுத்தும் முதல் கட்சியாக இந்த தமிழ் தேசிய புலிகள் கட்சி இருக்கும் என தெரிவித்துள்ளார். இன்று மாலை செயற்குழு கூட்டம் நடைபெற இருக்கிறது என கூறியுள்ளார்.

மேலும், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தொகுதி ஒதுக்காததால் வருத்தம் அளிக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, தமிழகத்தில் ஏற்கனவே சரத்குமார், கமல்ஹாசன், டி ராஜேந்தர் உள்பட பல நடிகர்கள் கட்சியை ஆரம்பித்துள்ள நிலையில் தற்போது நடிகர் மன்சூர் அலிகான் புதிய கட்சியை அறிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறியுள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.