குழந்தை போல தூங்குவேன்! கோப்பையை வென்றதால் எமோஷனலான விராட் கோலி!
பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் இறுதிப்போட்டியில் பெங்களூர் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

அகமதாபாத் : ஐபிஎல் சீசன் தொடங்கி 18-ஆண்டுகள் ஆகியிருக்கும் நிலையில் ஒருமுறை கூட கோப்பை வெல்லவில்லை என்கிற விமர்சனத்தை வாங்கிக்கொண்டு இருந்த பெங்களூர் அணி நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி முதல் முறையாக கோப்பையை வென்று விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளது. நேற்று நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த இறுதிப்போட்டியில் பெங்களூர் அணி பஞ்சாப் அணியை எதிர்கொண்டது.
முதலில் பேட்டிங் செய்த ஆர்சி பிஅணி 20 ஓவர்களில் ஒன்பது விக்கெட்டுகளுக்கு 190 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. எனவே, போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி முதல் முறையாக மகுடத்தை பெங்களூரு அணி முத்தமிட்டது.
இந்த வெற்றிபெற்ற தருணத்தில் அணியில் 18 சீசனாக விளையாடி வரும் விராட் கோலி கடுமையாக எமோஷனலாகி மைதானத்திலே அழுதார். வேகமாக சென்று மனைவியை கட்டிப்பிடித்து எமோஷனலாகவும் ஆகினார். போட்டிக்கு பிறகு பேசிய விராட் கோலி ” இந்த வெற்றி அணிக்கு மட்டுமல்ல, அதற்கு இணையாக ரசிகர்களுக்கும் சமமாக முக்கியமானது. இந்த வெற்றி எங்களுக்கு 18 ஆண்டுகள் நீண்ட கால காத்திருப்பு. அணிக்காக என்னுடைய முழு உழைப்பையும் கொடுத்திருக்கிறேன். ஒவ்வொரு சீஸனும் விளையாடும்போது கோப்பையை வெல்லவேண்டும் என ஆசைப்பட்டிருக்கிறேன்.
எனவே, இறுதியாக ஐபிஎல் கோப்பையை வெல்வது ஒரு நம்பமுடியாத உணர்வு. இந்த நாள் வரும் என்று நினைக்கவே இல்லை, கடைசி பந்து வீசப்பட்டவுடன் உணர்ச்சிகளால் மூழ்கிவிட்டேன். நான் வேறு பல தருணங்களை அனுபவித்திருக்கிறேன், ஆனால் இந்த அணியுடன் இருந்தேன், அவர்களும் என்னுடன் இருந்தார்கள். என் இதயமும் ஆன்மாவும் பெங்களூருடன் இருக்கிறது. இன்று இரவு நான் ஒரு குழந்தையைப் போல நிம்மதியாகத் தூங்குவேன்.” எனவும் விராட் கோலி தெரிவித்தார்.