லாராவின் சாதனையை முறியடிக்காதது ஏன்? – மனம் திறந்து வியான் முல்டர் சொன்ன காரணம்!
ஜிம்பாப்வேக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 367* ரன்கள் விளாசிய இருந்தபோது டிக்ளேர் அறிவித்திருந்தார் வியான் முல்டர்.

ஜிம்பாப்வேக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் வியான் முல்டர், 334 பந்துகளில் 367* ரன்கள் குவித்து, வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரைன் லாராவின் 400 ரன்கள் என்ற உலக டெஸ்ட் சாதனையை முறியடிக்க 34 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில், இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது 626/5 என்ற ஸ்கோரில் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தார்.இந்த முடிவு கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது, ஏனெனில் முல்டருக்கு லாராவின் வரலாற்று சாதனையை முறியடிக்கும் தனிப்பட்ட வாய்ப்பு இருந்தது.
ஆனால், அணியின் வெற்றியையும், லாராவின் மகத்தான சாதனை மீதான மரியாதையையும் முன்னிறுத்தி இந்த முடிவை எடுத்ததாக முல்டர் விளக்கமளித்தார், இது உலகளவில் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுள்ளது.முல்டர், கிரிக்பஸ் இணையதளத்தில் அளித்த பேட்டியில், “பிரையன் லாரா ஒரு சகாப்தம் – இதை நாம் மறுக்கவே முடியாது. இங்கிலாந்துக்கு எதிராக அவர் குவித்த 400 ரன்கள் என்பது கிரிக்கெட் வரலாற்றில் பொறிக்கப்பட்ட ஒரு சாதனை. அத்தகைய மகத்தான வீரரின் வசம் அந்த சாதனை இருப்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது. மீண்டும் எனக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தாலும், அதே முடிவைத்தான் எடுப்பேன்.
ஏனெனில், அந்த பெருமைக்குரிய வீரர் தன்வசம் வைத்திருக்கும் ஒரு உலக சாதனையை பாதுகாக்க உதவுவது, வீரர்களுக்கு இடையேயான பரஸ்பர மரியாதையையும், உணர்வையும் வெளிப்படுத்துவதாகும்,” என்று கூறினார். மேலும், அவர் தனிப்பட்ட சாதனைகளை விட அணியின் வெற்றி முக்கியம் என்றும், ஜிம்பாப்வே அணியை விரைவாக ஆட்டமிழக்கச் செய்து போட்டியை முடிக்க வேண்டும் என்று நினைத்ததாகவும் தெரிவித்தார்.
இந்த முடிவு முல்டரின் விளையாட்டு மனப்பான்மையையும், அணி உணர்வையும் வெளிப்படுத்தியது. அவரது 367* ரன்கள், தென்னாப்பிரிக்க வீரர்களில் ஒரு இன்னிங்ஸில் அதிகபட்ச ரன்கள் என்ற ஹசிம் ஆம்லாவின் 311 ரன்கள் சாதனையை முறியடித்தது, மேலும் கேப்டனாக அறிமுக டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற விராட் கோலியின் 256 ரன்கள் சாதனையையும் உடைத்தது. இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 626/5 என்ற ஸ்கோருடன் இன்னிங்ஸை முடித்து, ஜிம்பாப்வே அணியை ஃபாலோ-ஆன் செய்ய வைத்து, தோல்வியைத் தவிர்க்க முடியாத நிலைக்குத் தள்ளியது.
மேலும், முல்டரின் இந்த முடிவு, தனிப்பட்ட சாதனைகளை விட அணியின் நலனையும், கிரிக்கெட் உலகில் மரியாதையையும் முன்னிறுத்திய ஒரு உதாரணமாக அமைந்தது. ஏற்கனவே மூன்று சதங்கள் விளாசியுள்ள அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில் இது கூடுதலான பாராட்டுகளையும் பெற உதவியுள்ளது.