கூட்டணி ஆட்சி விவகாரம்: ‘அமித் ஷாவும், எடப்பாடியும் பேசி முடிவெடுப்பார்கள்’ – நயினார் நாகேந்திரன்.!
திமுகவுக்கு தேர்தல் தோல்வி பயம் வந்துவிட்டது என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னை : தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பேசி முடிவெடுப்பார்கள் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, தனியார் நாளிதழ் ஒன்றிக்கு அளித்த பேட்டியில், ”2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின் NDA கூட்டணி ஆட்சி தமிழகத்தில் அமையும் என்றும், அதில் பாஜக அங்கம் வகிக்கும் என்றும் அமித் ஷா கூறியிருந்தார். மேலும், முதல்வர் வேட்பாளராக இபிஎஸ் பெயரை அமித் ஷா குறிப்பிடாததும் கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்தித்து பேசிய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், ”முதல்வர் வேட்பாளர் பழனிசாமிதான், எங்கள் கூட்டணியை எந்தக் காலத்திலும் அவர்கள் பிளவுப்படுத்த முடியாது. மேலும், கூட்டணியின் தலைவராக எடப்பாடி பழனிசாமி இருப்பார் என்றும் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி விவகாரம் குறித்து அமித் ஷாவும், எடப்பாடி பழனிசாமியும் பேசி முடிவெடுப்பார்கள்.
மேலும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா எப்போது தமிழகம் வந்தாரோ அன்றே திமுகவுக்கு பயம் வந்துவிட்டது. பயம் மட்டும் இல்லை, நடுக்கத்திலும் இருக்கிறார்கள்” என்று கூறியுள்ளார்.