நடிகர் ராஜேஷ் மறைவு…தனக்குத் தானே கட்டிய கல்லறையில் உடல் நல்லடக்கம்!
நடிகர் ராஜேஷின் உடல் 40 வயதில் அவர் தனக்குத் தானே கட்டிய கல்லறையில் இன்று மரியாதைகளுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

சென்னை : தமிழ் திரையுலகின் மூத்த நடிகர் ராஜேஷ், தனது 75-ஆவது வயதில் சென்னையில் மாரடைப்பால் காலமானார். இவருடைய மறைவு சினிமா உலகில்பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் பலரும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். ராஜேஷ் இந்த மண்ணைவிட்டு மறைந்த நிலையில், அவருடைய உடல் அவர் உயிரோடு இருந்த சமயத்தில் தனக்கு தானே கட்டி வைத்திருந்த கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது.
ராஜேஷ் தனது 40ஆவது வயதில் சென்னையில் உள்ள தனது இல்லத்திற்கு அருகே கல்லறை கட்டியது, அவரது வாழ்க்கையில் ஒரு தனித்துவமான முடிவாகப் பேசப்பட்டது. உயிரோடு இருந்த சமயத்தில் அவர் இந்த விஷயத்தை பேட்டி ஒன்றில் கலந்துகொண்டபோது தெரிவித்தார். அந்த பேட்டியில் அவர் பேசும்போது ” நான் ஒருமுறை காரல் மார்க்ஸ் கல்லறையை பார்த்தபோது உடனே அதனை ஃபோட்டோ எடுத்துவந்து அப்படியே எனக்கு நான் கல்லறையை செய்ய வேண்டும் என நினைத்தேன். அந்த சமயம் என்னுடைய தயார் முதலில் இறந்தார். எனவே, அவருக்கு அதேபோல் ஒரு குடும்ப கல்லறையை மார்பெல் மூலம் கட்டினேன்.
4,5 வருடங்களுக்கு ஒருமுறை அந்த கல்லறை கீழே இறங்க இறங்க, அதற்கு மேலே இன்னொரு கல்லறையை கட்டலாம்.என்னுடைய தாயார் இறந்த பிறகு என்னுடைய அப்பா இறந்தார். அதன்பின் 25 வருடங்கள் ஆகிவிட்டதால் மார்பெல் உடைந்தது. எனவே கிரானைட் கொண்டு கல்லறையை புதுப்பித்தேன். பின் என்னுடைய மனைவி இறந்தார். அவருக்கு அடுத்து எனக்கும் இடம்விட்டு என்னுடைய 40-வது வயதில் எனக்கு நானே கல்லறையை கட்டினேன்.
100 வயது வரை வாழ்வார் என சீன பழமொழி ஒன்று உள்ளது. ஆனால் நான் அதற்காக எனக்கு கல்லறையை கட்டவில்லை. இந்த கல்லறையில்தான் நான் இருக்கப் போகிறேன் என மிகவும் விருப்பப்பட்டு கட்டினேன். அதில் எழுதுவதற்கு வாசகம் ஒன்றும் எழுதி வைத்திருந்தேன்” எனவும் ராஜேஷ் எமோஷனலாக அந்த பேட்டியில் பேசியிருந்தார்.
எனவே, அவர் ஆசைப்பட்டது போல அவருடைய உடல் அவரே கட்டிவைத்திருந்த கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது. அவரை அடக்கம் செய்யப்பட்டுள்ள அந்த கல்லறையில் “வாழ்க்கை ஒரு பயணம், மரணம் ஒரு தொடக்கம்” என்று எழுதிய வாசகமும் இடம்பெற்றுள்ளது. இந்த இடத்தில் அவரது பெற்றோர் மற்றும் மனைவியின் உடல்களும் அடக்கம் செய்யப்பட்டிருந்தன. எனவே, ராஜேஷ் உடைய உடலும் இன்று (மே 31) அங்கு அடக்கம் செய்யப்பட்டது.