ரஜினிக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும்- பிரேமலதா கோரிக்கை!

திரையுலகத்தில் உள்ள அனைவரும் இணைந்து ரஜினிகாந்திற்கு பாராட்டு விழா நடத்தவேண்டும் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

premalatha vijayakanth rajinikanth

சென்னை :தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், திரைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதற்கு, தேசிய முற்போக்கு திராவிட கழக (தேமுதிக) பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆகஸ்ட் 12, 2025 அன்று வாழ்த்து தெரிவித்தார். “ரஜினிகாந்தின் திரைப்பயணத்தில் 50 ஆண்டுகள் என்பது மாபெரும் சாதனை. திரையுலகில் உள்ள அனைவரும் இணைந்து அவருக்கு ஒரு பாராட்டு விழா எடுக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.பிரேமலதா மேலும் தெரிவிக்கையில், “எனது கணவர் கேப்டன் விஜயகாந்த் இருந்திருந்தால், ரஜினிகாந்தின் 50-வது திரைப்பயண ஆண்டு விழாவை மிகவும் விமரிசையாக கொண்டாடியிருப்பார்,” என்று உணர்ச்சிபூர்வமாக குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் வளைத்தள பக்கத்தில் பிரேமலதா ” திரைத்துறையில் 50 ஆண்டுகாலம் நிறைவு செய்திருக்கிறார் ரஜினிகாந்த் அவர்கள்… அவருக்கு என்னுடைய வாழ்த்துக்களை கேப்டன் சார்பாகவும் என் சார்பாகவும் மற்றும் தேமுதிக தொண்டர்கள் சார்பாகவும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கேப்டன் மீது பேரன்பு கொண்டவர் ரஜினிகாந்த் என்பது நாடறியும். கேப்டன் இருந்திருந்தால் நிச்சயமாக ரஜினிகாந்த்திற்கு ஐம்பதாவது ஆண்டு விழா விமர்சையாக கொண்டாடி இருப்பார். கேப்டன் மீதும் எங்கள் குடும்பத்தினர் மீதும் பேரன்பு கொண்டவர்கள் ரஜினிகாந்த் அவர்களும் அவரது குடும்பத்தினரும்.

திரை உலகில் உள்ள சங்கங்கள் எல்லாம் இணைந்து,சூப்பர் ஸ்டாராக ஐம்பது ஆண்டு காலம், தமிழ் திரையுலகில் வலம் வந்த ரஜினிகாந்த் அவர்களுக்கு மிகப்பெரிய பாராட்டு விழா எடுக்க வேண்டும். திரை உலகத்தில் உள்ள அனைவரும் இணைந்து இந்தப் பாராட்டு விழாவை நடத்தினால் சிறப்பாக இருக்கும் என கேட்டுக்கொள்கிறேன்” என கூறியுள்ளார்.

ரஜினிகாந்தின் ‘கூலி’ படம் வரும் ஆகஸ்ட் 14-ஆம் தேதி வெளியாகிறது. எனவே, படத்தின் வெளியீட்டை முன்னிட்டு, அவரது நீண்டகால பங்களிப்பை பாராட்டும் வகையில் இந்த வாழ்த்து வெளியிடப்பட்டுள்ளது. 1975-ல் ‘அபூர்வ ராகங்கள்’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான ரஜினிகாந்த், 50 ஆண்டுகளாக தனது தனித்துவமான நடிப்பு மற்றும் ரசிகர் ஆதரவால் உலகளவில் புகழ் பெற்று உச்சத்தில் இருக்கிறார். பிரேமலதாவின் இந்த அறிக்கை, தமிழ் திரையுலகில் ரஜினிகாந்தின் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்துவதோடு, அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக அமைந்துள்ளது.

unknown node