ஜார்க்கண்ட் :மாநிலத்தில் வருகின்ற நவம்பர் 13 மற்றும் 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனையடுத்து, தேர்தலில் போட்டியிடம் கட்சிகள் அனைத்தும் தங்களுடைய அரசியல் வேலைகளில் மும்மரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இந்த தேர்தலில், பாஜக கட்சி ஏஜேஎஸ்யு, எல்ஜேபி ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறது.
மொத்தமாக, ஜார்க்கண்ட் பேரவைத் தேர்தலில் பாஜக 68 இடங்களில் போட்டியிடும். எஞ்சியுள்ள 13 தொகுதிகளில் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் எனவும் ஏற்கனவே, அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனையடுத்து, தற்போது ஜார்கண்ட் சட்டசபைத் தேர்தலுக்கான பா.ஜ.க சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் முதல் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அக்டோபர் 19 சனிக்கிழமையன்று 66 வேட்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது.
unknown nodeஅதன்படி, பாஜக மாநிலத் தலைவர் பாபுலால் மராண்டி ராஜ்தன்வார் தொகுதியில் போட்டியிடுகிறார். ராஜ்மஹாலில் இருந்து அனந்த் ஓஜா, போரியோவில் இருந்து லோபின் ஹெம்ப்ராம், லிட்டிபாராவில் இருந்து பாபுதன் முர்மு, மகேஷ்பூரில் இருந்து நவ்நீத் ஹெம்ப்ராம், ஷிகாரிபாடாவில் இருந்து பரிதோஷ் சோரன் மற்றும் நாலாவில் இருந்து மாதவ் சந்திர மஹதோ ஆகியோர் வேட்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதைப்போல, சிபு சோரன் மருமகள் சீதா சோரன், முன்னாள் முதல்வர் சம்பாய் சோரனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, சரைக்கேலாவில் முன்னாள் முதல்வர் சம்பாய் சோரனும், முன்னாள் முதல்வர் சிபு சோரனின் மூத்த மருமகள் சீதா சோரன் ஜம்தரா தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.
வேட்பாளர்கள் விவரம் குறித்து அறிவிக்கப்பட்டது பற்றி பாஜக தேசிய பொதுச்செயலாளர் அருண் சிங் கூறியதாவது ” கட்சியின் மத்திய தேர்தல் குழு கூட்டம் அக்டோபர் 15ம் தேதி ஜே.பி.நட்டா தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் மத்திய தேர்தல் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அந்த கூட்டத்தில் கலந்துரையாடி 66 பெயர்கள் கொடுக்கப்பட்டது. அதன்பிறகு, ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலுக்கான முதல்கட்டமாக 66 பெயர்களுக்கு மத்திய தேர்தல் கமிட்டி ஒப்புதல் அளித்துள்ளது” என கூறியுள்ளார்.
