ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்...அவசரமாக இந்தியா திரும்பிய பிரதமர் மோடி!

பிரதமர் மோடி சவுதி அரேபியா பயணத்தை பாதியில் ரத்து செய்து இன்று அதிகாலை இந்தியா வந்தடைந்தார்.

narendra modi INDIA

ஸ்ரீநகர் :நேற்று (ஏப்ரல் 22) உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடந்தது. இந்த தாக்குதல் தற்போது வரை கிடைத்த தகவலின் படி சம்பவத்தில் 26 பேர் உயிரிழந்த நிலையில், 20 க்கும் மேற்பட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள், இரண்டு உள்ளூர் மக்கள், ஒரு எமிரேட் மற்றும் ஒரு நேபாள நாட்டவர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.

தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றதாக முதற்கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன, இது மேற்கு வங்க கலவரத்தில் தலைவர்கள் கைதுக்கு எதிரான பதிலடியாக இருக்கலாம் எனவும் தகவல்கள் ஓடிக்கொண்டு இருக்கிறது. தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து இந்திய இராணுவம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் காவல்துறையின் கூட்டு நடவடிக்கையில், பைசரான் பகுதியில் தீவிரவாதிகளை தேடும் பெரிய அளவிலான தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டுள்ளது.

அந்த பகுதி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, வாகன சோதனைகள் நடைபெற்று வருகிறது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு உலக அரசியல் தலைவர்கள் வரை பலரும் கண்டனங்களை பதிவு செய்து வருகிறார்கள். இந்த சூழலில், பிரதமர் நரேந்திர மோடி தனது சவுதி அரேபியா பயணத்தை பாதியில் ரத்து செய்தார். இன்று (ஏப்ரல் 23, 2025) அதிகாலை அவர் இந்தியா திரும்பினார்.

பிரதமர் மோடி, தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து, குற்றவாளிகளை கண்டறிந்து தண்டிக்க உறுதியளித்துள்ளார். அவர் டெல்லியில் உயர்மட்ட பாதுகாப்பு கூட்டத்தை நடத்த உள்ளார். உள்துறை அமைச்சர் அமித் ஷா ஏற்கனவே ஸ்ரீநகருக்கு சென்று பாதுகாப்பு நிலைமைகளை ஆய்வு செய்து வருகிறார். இந்திய இராணுவமும் காவல்துறையும் பைசரான் பகுதியில் தீவிரவாதிகளை தேடி தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. இப்போது பிரதமர் மோடி இந்தியா திரும்பியுள்ள நிலையில், உயர்மட்ட பாதுகாப்பு கூட்டம் விரைவில் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.