வயநாடு நிலச்சரிவு :கடந்த சில நாட்களாகவே கேரளாவில் கனமழை பெய்து வந்த நிலையில், நேற்று கேரள மாநிலம் வயநாடு பகுதியில் பெய்த கனமழை காரணமாக பல பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டது . இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்ற தகவல் முன்னதாக கூறப்பட்டது.
இந்நிலையில், மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்ற நிலை உருவாகியுள்ளது. இதனையடுத்து, பலி எண்ணிக்கை 60 லிருந்த்து 70-ஆக அதிகரித்துள்ளது. மீட்பு பணியில் ஆறுகள் மற்றும் சேற்றில் இருந்து உடல் பாகங்களை மீட்டெடுப்பதால், இறந்தவர்களின் சரியான எண்ணிக்கையைக் கண்டறிவது கடினம் என்று வட்டாரங்கள் தகவலை தெரிவித்துள்ளனர்.
நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதையுண்ட 100க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்களில் பல பெண்களும் குழந்தைகளும் உள்ளனர். நிலச்சரிவில் சிக்கி இருப்பவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்த மீட்பு பணிகளில் மாநில அரசின் மீட்புப்படையினர் மட்டும்மல்லாது, தேசிய மீட்பு படையினர், இந்திய ராணுவத்தினர், விமானப்படையினரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்க தமிழகத்திலிருந்து 9 தேசிய பேரிடர் மீட்புக் குழுவைச் சேர்ந்த 33 வீரர்கள் புறப்பட்டு சென்றனர்.
மேலும், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 70 பேர் உயிரிழந்ததையடுத்து, கேரளாவில் இன்றும் நாளையும் அதிகாரப்பூர்வ துக்கம் அனுசரிக்கப்படுவதாக கேரள அரசு அறிவித்துள்ளது.
unknown node