மாநிலங்களவைத் தேர்தல்: வேட்பாளர்கள் அறிவிப்பு.., தேமுதிகவுக்கு ’நோ’ சொல்லிய அதிமுக.!
அதிமுக சார்பில் ராஜ்யசபா தேர்தலில் முன்னாள் எம்.எல்.ஏ. இன்பதுரை மற்றும் செங்கல்பட்டு மாவட்ட அவை தலைவர் தனபால் போட்டியிட போவதாக கே.பி.முனுசாமி அறிவித்துள்ளார்.

சென்னை : ராஜ்யசபா தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்களை அக்கட்சி துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி அறிவித்துள்ளார். ராஜ்யசபா வேட்பாளர்களாக அக்கட்சியின் மூத்த தலைவர் இன்பதுரை மற்றும் செங்கல்பட்டு தனபால் போட்டியிடுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் இரண்டு இடங்களிலும் அதிமுகவே போட்டியிடுகிறது. தேமுதிகவிற்கு சீட் கொடுப்பது அதிமுகவின் கடமை என பிரேமலதா விஜயகாந்த் கூறியிருந்த நிலையில், சீட் கொடுக்கப்படவில்லை. அதே நேரம், அதிமுக கூட்டணியில் தேமுதிக தொடரும் என்று கே.பி.முனுசாமி அறிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மாநிலங்களவை தேர்தல் 2025- கழக வேட்பாளர்கள்
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள் அறிவிப்பு. pic.twitter.com/ky60ZGdIdt
— AIADMK – -SayYesToWomenSafety&AIADMK (@AIADMKOfficial) June 1, 2025
சமீபத்தில், தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ், எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ராஜ்யசபா சீட் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார். இந்நிலையில், தற்போது தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் இல்லை, 2026 மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு ஒரு சீட் வழங்கப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அஇஅதிமுக தலைமையிலான கூட்டணியில், தேமுதிக தொடரும்.
2026-ல் நடைபெற உள்ள நாடாளுமன்ற மாநிலங்களவை தேர்தலின்போது, அஇஅதிமுக தேமுதிக-விற்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை வழங்கும்.
-தலைமைக் கழக அறிவிப்பு pic.twitter.com/q8HP69PjwA
— AIADMK – -SayYesToWomenSafety&AIADMK (@AIADMKOfficial) June 1, 2025
இதையடுத்து, சென்னை பசுமைவழிச் சாலை இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளரிடம் மாநிலங்களவை வேட்பாளர்களான வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இன்பதுரை மற்றும் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அவை தலைவர் தனபால் ஆகியோர் வாழ்த்து பெற்றனர்.