"பாஜக – அதிமுக கூட்டணி வரும்" நயினார் நாகேந்திரன் பேட்டி!

இபிஎஸ் உடன் நேரடியாக பேசினாலே அதிமுக - பாஜக கூட்டணி உறுதியாகும் என பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

BJP MLA Nainar Nagendran - ADMK Chief secretary Edappadi Palanisamy

திருநெல்வேலி :2021 சட்டமன்ற தேர்தல் வரையில் தமிழ்நாட்டில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக அங்கம் வகித்தது. அதன் பிறகு பாஜக – அதிமுக தலைவர்கள் இடையிலான பல்வேறு கருத்து மோதல்களை அடுத்து பாஜகவுடனான தங்கள் கூட்டணியை அதிமுக முறித்துக்கொண்டது.

கடந்த வருடம் நடைபெற்ற 2024 நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் அதிமுகவும், பாஜகவும் தனித்தனியே போட்டியிட்டன. இதில் இரு கட்சிகளுமே தோல்வி அடைந்தன . இதனை அடுத்து மீண்டும் அதிமுக – பாஜக கூட்டணி வருமா என எதிர்ப்பார்த்த நிலையில் அதிமுக தலைவர்கள் இதனை தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய திருநெல்வேலி பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் அதிமுக பாஜக கூட்டணி பற்றி  பேசினார். அவரிடம் செய்தியாளர்கள்,  அதிமுக நிர்வாகி ஒருவரது வீட்டில் ஐடி ரெய்டு நடப்பது பற்றி கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் கூறுகையில், “கூட்டணி உறுதியாக வேண்டும் என ரெய்டு எல்லாம் நடத்த வேண்டாம். இபிஎஸ் (எடப்பாடி பழனிச்சாமி) உடன் நேரடியாக பேசினாலே அதிமுக – பாஜக கூட்டணி உறுதியாகிவிடும். ஐடி ரெய்டு பணம் யாரிடம் இருக்கிறதோ அவர்களிடம் நடக்கும். உங்களிடம் பணம் இருந்தால் உங்கள் வீட்டுக்கு கூட ரெய்டு வருவார்கள்” என நயினார் நாகேந்திரன் கூறினார்.