தாம்பரத்தில் சிக்கிய 4 கோடி ரூபாய்.! நயினார் நாகேந்திரனுக்கு சம்மன்.! 

சென்னை: தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்த வழக்கில் நயினார் நாகேந்திரன் உட்பட 4 பேருக்கு சிபிசிஐடி சம்மன்

Nainar Nagendran

சென்னை:தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்த வழக்கில் நயினார் நாகேந்திரன் உட்பட 4 பேருக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது.

தமிழகத்தில் மக்களவை தேர்தல் விதிமுறைகள் தீவிரமாக அமலில் இருந்த சமயத்தில் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி சென்னை, தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து நெல்லை புறப்பட இருந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த 3 பேரிடம் இருந்து தேர்தல் பறக்கும் படையினர் 6 பைகளில் 4 கோடி ரூபாயை பறிமுதல் செய்தனர். அதனை கொண்டு சென்ற சதீஷ், நவீன், பெருமாள் ஆகியோரிடம் விசாரணை நடைபெற்றது.

அப்போது மேற்கண்ட 3 நபர்களும் சென்னையில் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான உணவகத்தில் பணியாற்றுபவர்கள் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும், இவர்கள் நயினார் நாகேந்திரனின் எம்எல்ஏ கோட்டாவில் உள்ள ரயில் டிக்கெட்டில் பயணித்தார்கள் என்பதும் பின்னாளில் விசாரணையில் தெரியவந்தது.

4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கானது கடந்த ஏப்ரல் மாதமே  சிபிசிஐடி வசமானது. அதன் பின்னர் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு, நயினார் நாகேந்திரன் , பாஜக நிர்வாகி கேசவ விநாயகம் உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் பல்வேறு கரணங்கள் கூறி நேரில் ஆஜராகுவதை தவிர்த்து வந்துள்ளார். மேலும், இந்த சம்மன் நடவடிக்கைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார் நயினார் நாகேந்திரன். ஆனால், அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு விசாரணைக்கு நேரில் ஆஜராக கூறப்பட்டது.

இதனை அடுத்து, தற்போது, திருநெல்வேலி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன், பாஜக அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் , பாஜக ஐடி விங் நிர்வாகி கோவர்தன், நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் ஆகிய 4 பெருகும் சிபிசிஐடி போலீசார் இன்று சம்மன் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  இவர்கள் 4 பேரும் நாளை மறுநாள் (மே 31) சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் நேரில் ஆஜராக சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது.