சொத்து வரி செலுத்தாதவர்களின் விவரங்கள் – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

Details of non-payers of property tax - Chennai High Court orders action ..!

சொத்து வரி செலுத்தாதவர்களின் விவரங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலக இணைய தளத்தில் வெளியிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாமக்கல்லை சேர்ந்த ஒரு தனியார் பொறியியல் கல்லூரி,கூடுதல் சொத்து வரியை செலுத்தும்படி,நாமக்கல் தட்டான்குட்டை கிராம பஞ்சாயத்து சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.இதனை எதிர்த்து அக்கல்லூரி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில்,இந்த வழக்கு,சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.அப்போது, அதிக கட்டணம் வசூலித்து வணிக நோக்கில் செயல்படும் கல்வி நிறுவனங்கள் வரி செலுத்த தயங்குகின்றன என்று குறிப்பிட்ட நீதிபதி, சொத்து வரி மதிப்பீடு, வரி வசூல் போன்ற நடவடிக்கைகளில் மெத்தனப்போக்கு உள்ளது.எனவே,ஊழல்களில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி தெரிவித்தார்.

இதனையடுத்து,சொத்து வரி செலுத்தாமல் ஏமாற்றியவர்களின் விவரங்கள், வரி பாக்கி விவரங்கள் போன்றவற்றை மாவட்ட ஆட்சியர் அலுவலக இணைய தளத்தில் வெளியிட வேண்டும் என உத்தரவிட்டார்.மேலும்,அனைத்து மாவட்டங்களிலும், ஆட்சியர் தலைமையில் வரிவிதிப்பு குழுவை அமைக்கும்படி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை செயலாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.