விஜயுடன் இணைகிறாரா ஆதவ் அர்ஜுனா? திருமாவளவன் சொன்ன பதில்!
த.வெ.க கட்சியில் விஜய் இணையவுள்ளதாக பரவும் தகவல் குறித்து விசிக தலைவர் திருமாவளவன் பேசியுள்ளார்.

சென்னை : கடந்த ஆண்டு சென்னையில் நடைபெற்ற அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டபோது ஆதவ் அர்ஜுனா பேசிய விஷயங்கள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. விசிக கட்சியின் துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்த அவர் விழாவில் பேசும்போது ” 2026இல் மன்னராட்சியை ஒழிக்க வேண்டும். யாரும் பிறப்பால் முதலமைச்சர் ஆக கூடாது” என பேசியிருந்தார்.
இதனையடுத்து, விசிக கூட்டணி வைத்திருக்கும் திமுகவுக்கு எதிராக அவர் கருத்து கூறியதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், கட்சியின் தலைவர் திருமாவளவன் ஆதவ் அர்ஜுனா கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக கூறி கட்சியில் இருந்து 6 மாத காலம் இடைநீக்கம் செய்யப்படுவதாக அறிவிப்பு ஒன்றையும் வெளியீட்டு இருந்தார். கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து ஆதவ் அர்ஜுனா தான் இந்த கட்சியில் இருந்து விளங்குவதாகவும் அறிவித்தார்.
“கட்சியில் இருந்து விலகினாலும் என்னுடைய அரசியல் பயணங்கள் தொடரும் ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவ(ன்) மறைவதில்லை” என ஆதவ் அர்ஜுனா தெரிவித்திருந்தார். இதனையடுத்து, அவர் அடுத்ததாக எந்த கட்சியில் இணையப்போகிறார் என்கிற கேள்விகளும் எழுந்த நிலையில், சமீபத்திய வெளியான தகவலின் படி அவர் த.வெ.க கட்சியில் இணையவுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.
ஆதவ் அர்ஜுனா த.வெ.கவில் இணைவது குறித்து விசிக தலைவர் திருமாவளவன் பிரபல தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியிலும் பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” விஜய்யுடன் இணைந்து ஆதவ் அர்ஜுனா இயங்கப்போகிறார் என்பது மகிழ்ச்சி தான். அவருக்கு வாழ்த்துக்கள். அவரை நாங்கள் இடைநீக்கம் தான் செய்தோம். அவர் தான் கட்சியில் இருந்து விலகி கொள்வதாக அறிவித்தார்.
இடைநீக்கம் செய்வதற்கு முன்னதாக நான் அவருக்கு சில வழிகாட்டுதல்களை வழங்கினேன். அப்படி இருந்தும் அவர் அதனை மீறினார் என்ற காரணத்தால் தான் அவருக்கு இடைநீக்கம் உத்தரவு வழங்கப்பட்டது. ஆதவ் அர்ஜுனா விஜய்யை சந்தித்தார் என பரவும் தகவல் உண்மை தான். அதனை வைத்து அவர் கட்சியில் இணையப்போகிறார் அவருக்கு பொறுப்பு வழங்கப்படவுள்ளது என ஊடகங்கள் செய்திகளை வெளியீட்டு வருகிறது. எப்படியாக இருந்தாலும் அவர் விஜய் கட்சியில் இணைந்து இயங்கப்போகிறார் என்பது மகிழ்ச்சி தான். ஆனால், எங்களுடன் தொடர்ந்து இயங்கவில்லை என்பது வருத்தம்தான்” எனவும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.