குலசேகரன்பட்டினம் தசரா கோலாகலம்.. இன்று இரவு சூரசம்ஹார விழா.!

தசரா திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மஹிஷா சூரசம்காரம் இன்று (12-தேதி) நள்ளிரவு கோவில் கடற்கரையில் நடைபெறுகிறது.

Kulasekaranpattinam Surasamhara festival_11zon

தூத்துக்குடி :தசராவிற்கு உலக புகழ்பெற்ற தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழா கடந்த மூன்றாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ஒவ்வொரு ஆண்டும் வெகு விமர்சியாக நடைபெற்று வரும் இந்த திருவிழாவில் மாலை அணிந்துகொண்டு பக்தர்கள் அம்மன், முருகன், விநாயகர், குரங்கு, கரடி போன்ற வேடங்கள் அணிந்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.

அதன்படி, 10 நாட்கள் நடைபெற்ற தசரா திருவிழாவில் பக்தர்கள் விரதம் இருந்து, வேடமணிந்து காணிக்கை எடுத்து வந்தனர். இந்த திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மஹிஷா சூரசம்காரம் இன்று (12-தேதி) நள்ளிரவு கோவில் கடற்கரையில் நடைபெறுகிறது.

இந்த சூரசம்ஹார நிகழ்ச்சியில் கலந்து கொள்ள லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்துள்ளனர். இதனால், 4 ஆயிரம் போலீசார், 250 சிசிடிவி கேமராக்களுடன் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.