“திமுகவை மக்களே வீழ்த்துவார்கள்”…பாஜக உயர்மட்டக் குழு கூட்டத்தில் அமித்ஷா பேச்சு!
திமுகவை தூக்கியெறிய மக்கள் காத்திருப்பதாக பாஜக உயர்மட்டக்குழு கூட்டத்தில் அமித்ஷா கூறியுள்ளார்.

மதுரை : மாவட்டத்தில் நடைபெற்ற பாஜக உயர்மட்டக் குழு கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று கலந்து கொண்டார். கலந்து கொண்டு பேசிய அவர், கூட்டணிக் கட்சிகளுடன் நட்புறவு பாராட்டவும், இணக்கமாக செயல்படவும், 2026-ம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளை இப்போதே தொடங்கவும் பாஜகவினருக்கு உத்தரவிட்டார்.
“நம்பிக்கையோடு பணியாற்றுங்கள், வரும் காலம் நமதே” என்று உறுதியாகக் கூறிய அவர், தமிழகத்தில் பாஜக-அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். மேலும், தமிழ் மொழியில் பேச முடியாததற்காக தமிழக பாஜக தொண்டர்களிடம் மன்னிப்பு கோரினார், தமிழ் மொழியை இந்தியாவின் மிகச் சிறந்த மொழிகளில் ஒன்றாகவும் புகழ்ந்து பேசினார்.
அமித்ஷா, கூட்டணிக் கட்சிகளையும் அவற்றின் தலைவர்களையும் பாஜகவினர் விமர்சிக்கக் கூடாது என்று அறிவுறுத்தினார். 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியுடன் இணைந்து 50 தொகுதிகளில் போட்டியிடுவதற்கு வேட்பாளர்களைத் தயார்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி பேசினார். அதன்பின், தமிழகத்தில் திமுக ஆட்சியை வீழ்த்துவது தொடர்பாக அவர் பேசுகையில் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை வீழ்த்தியது போல, தமிழக மக்களின் ஆதரவுடன் திமுகவையும் தோற்கடிப்போம் என்று உறுதியளித்தார்.
திமுக ஆட்சியை கடுமையாக விமர்சித்த அமித்ஷா, தமிழகத்தில் எந்தத் துறையை எடுத்தாலும் ஊழல் மயமாகிவிட்டதாகக் குற்றம்சாட்டினார். மோடி அரசு வழங்கும் நிதி மக்களுக்கு முழுமையாகக் கிடைப்பதில்லை என்றும், திமுக அரசு அதைத் தடுப்பதாகவும் குற்றம் சாட்டினார். தமிழக மக்கள் திமுக ஆட்சியில் எவ்வித நன்மையும் பெறாமல் தவிப்பதாகவும், இதற்கு மாற்றாக பாஜக-அதிமுக கூட்டணி ஆட்சி மக்களுக்கு நல்லாட்சி வழங்கும் என்றும் அவர் வாக்குறுதி அளித்தார்.
பின் பேசிய அவர் ” மு.க.ஸ்டாலின் அமித்ஷாவால் திமுகவை தோற்கடிக்க முடியாது என கூறியுள்ளார். சரி நான் அவருக்கு இந்த நேரத்தில் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன் என்னவென்றால், என்னால் உங்களை தோற்கடிக்க முடியாது. ஆனால் தமிழ்நாட்டு மக்கள் உங்களை (திமுகவை) தோற்கடிக்க தயாராக உள்ளனர். இவ்வளவு காலம் அரசியலில் மக்களின் நாடித்துடிப்பை அறிந்தவன் நான். 2026ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் திமுகவை தூக்கி எறிவார்கள்” எனவும் உறுதியாக தெரிவித்தார்.
இறுதியாக 2026-ம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தல் பாஜகவுக்கு மிகவும் முக்கியமானது என்று வலியுறுத்திய அவர் மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் பாஜக பெற்ற அமோக வெற்றிகளை எடுத்துக்காட்டாகக் குறிப்பிட்டார். இந்த வெற்றிகளை முன்மாதிரியாகக் கொண்டு, தமிழகத்திலும் வெற்றி பெறுவதற்கு தொண்டர்கள் உறுதியுடன் பணியாற்ற வேண்டும் எனவும் பேசி அமித்ஷா தனது உரையை முடித்தார்.