பாமக விவகாரம் : “அன்புமணியை சந்திக்க மாட்டேன்”…ராமதாஸ் பதில்!
அன்புமணியுடனான சந்திப்புக்கு பிறகு தனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவழிக்க சென்னையை நோக்கி ராமதாஸ் சென்றுள்ளார்.

சென்னை : பா.ம.க நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி இடையே எழுந்த பிரச்சினை என்பது அரசியல் வட்டாரத்தில் ட்ரென்டிங் டாப்பிக்காக வெடித்தது. ஒரு பக்கம் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அன்புமணியின் ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கி கட்சித் தலைவர் தானே எனவும் கூறி வந்த நிலையில், மற்றொரு பக்கம் கட்சியின் தலைவர் அன்புமணி சென்னை சோழிங்கநல்லூரில் பாமக நிர்வாகிகள் கூட்டத்தை நடத்தி நீக்கப்பட்ட நிர்வாகிகளை மீண்டும் அதே பதவியில் நியமித்து, பொதுக்குழுவால் தலைவராக தேர்வு செய்யப்பட்டது நானே? எனவே நான் சொல்வது தான் செல்லும் என கூறி வந்தார்.
எனவே, கட்சி 2 பக்கங்களாக பிரிந்தது தொண்டர்களுக்கு மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனையடுத்து, பிரச்சினையை பேசி முடிக்க ஜூன் 5-ஆம் தேதி காலை அன்புமணி ராமதாஸை சந்திக்க காலையிலே சென்னையிலிருந்து தைலாபுரம் தோட்டத்துக்கு புறப்பட்டு சென்றிருந்தார்.
சந்திப்புக்கு பின் நல்ல செய்தி வரும் என ராமதாஸ் கூறியதால் சமாதானம் என்றே எடுத்துக் கொள்ளலாம். மேலும் பூம்புகார் மகளிர் மாநாட்டு வேலையை பாருங்க என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியதாக தைலாபுரம் இல்லத்தில் ராமதாஸை அன்புமணி சந்தித்த பின் பாமக அரசியல் குழுத் தலைவர் தீரன் செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்.
இப்படியான சூழலில், இன்று தனது இளைய மகள் கவிதா வீட்டில் தங்கி மருத்துவ பரிசோதனைகளை முடித்து விட்டு மூன்று நாட்கள் கழித்து மீண்டும் ராமதாஸ் தைலாபுரம் திரும்பினார். திரும்பும் போது செய்தியாளர்களை சந்தித்த அவர் ” நான் சென்னைக்கு என்னுடைய சொந்தங்களை பார்ப்பதற்காக செல்கிறேன். குழந்தைகள், பேரன், கொள்ளு பேரன் ஆகியோரை பார்க்க செல்கிறேன். மீண்டும் திங்கள்கிழமை வருகிறேன். அதன்பிறகு செவ்வாய்கிழமை உங்களை சந்திக்கிறேன்” என தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து பாமகவில் நிர்வாகிகள் மாற்றம் செய்யப்படுவது குறித்து செய்தியாளர்கள் கேள்விகளை எழுப்பினார்கள். அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் பேசிய அவர் ” நிர்வாகிகள் நினைக்கும் படி இந்த குழப்பங்களுக்கு விரைவில் உங்களுடைய விருப்பப்படி புள்ளி வைக்கப்படும்” என பதில் அளித்தார்.
அதன்பின் சென்னைக்கு வந்திருக்கிறீர்கள் அன்புமணியை சந்திக்க வாய்ப்பு இருக்கிறதா? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கும் பதில் அளித்த ராமதாஸ் ” இல்லை நான் சந்திக்கபோறது இல்லை” என பதில் அளித்தார். அமித்ஷா வருகையை ஒட்டி பாஜகவுடன் கூட்டணி பேசப்படுமா என்ற செய்தியாளர் கேள்விக்கு எனக்கு தெரியாது என ராமதாஸ் பதில் அளித்துவிட்டு சென்றார்.