”டாஸ்மாக்கில் ஏதோ தவறு நடக்கிறது” – உயர்நீதிமன்ற நீதிபதி புகழேந்தி கருத்து.!
தமிழ்நாடு டாஸ்மாக் ஊழல் புகார்கள் குறித்து வெளிப்படையாக ஊடகங்களுக்கு பேட்டியளித்த மூன்று ஊழியர்கள் மீது எடுக்கப்பட்ட பணியிடை நீக்க நடவடிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.

மதுரை : கடந்த சில ஆண்டுகளாக டாஸ்மாக் கடைகளில் முறைகேடுகள், ஊழல், மற்றும் சட்டவிரோத பணப் பரிமாற்றங்கள் குறித்து பல புகார்கள் எழுந்துள்ளன. இந்தப் புகார்களை அடிப்படையாகக் கொண்டு, அமலாக்கத்துறை டாஸ்மாக் நிறுவனத்தில் சோதனைகள் நடத்தி, ஆவணங்களை கைப்பற்றியது.
இந்த விசாரணைகள் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான முறைகேடுகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தன. இந்த முறைகேடுகளைப் பற்றி ஊடகங்களுக்கு வெளிப்படையாக பேசிய மூன்று டாஸ்மாக் ஊழியர்கள், நிர்வாகத்தால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
தங்களை சஸ்பெண்ட் செய்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என 3 மனுதாரர்கள் தரப்பில் வலியுறுத்தி மனு தாக்கல் செய்யப்பட்டது. இப்பொது, மதுரையில் டாஸ்மாக்கில் நடைபெற்ற ஊழல் குறித்து ஊடகங்களுக்கு பேட்டி அளித்த ஊழியர்கள் மீதான நடவடிக்கையை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இன்று உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புகழேந்தி, கள்ளச்சாராயத்தால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கவே அரசு மது விற்பனையில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிட்டார். ஊழல் குற்றச்சாட்டுகளை ஆராயும்போது ஏதோ தவறு நடப்பது மட்டும் தெரிகிறது என கூறினார்.
கள்ளச்சாராயம் போன்ற சட்டவிரோத மதுவால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க அரசே மதுபான விற்பனையில் ஈடுபடுகிறது, இந்தத் துறையில் ஊழல்களை அனுமதிக்கக் கூடாது. ஊழல் குற்றச்சாட்டில் கிடைக்கக்கூடிய ஆவணங்களை பார்க்கும்போது, ”மொத்த டாஸ்மாக்கிலும் ஏதோ” நடக்கிறது என்பது மட்டும் தெரிகிறது’ என நீதிபதி புகழேந்தி கருத்து தெரிவித்துள்ளார்.