சபரிமலை பக்தர்கள் கவனத்திற்கு... 60 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்.!

சபரிமலை பக்தர்களுக்கு 60 நாட்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கவுள்ளதாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

setc bus - sabarimala

சென்னை :கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்திபெற்ற சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு சீசனையொட்டி அடுத்த மாதம் (நவம்பர்) 15-ந் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. டிசம்பர் மாதம் 26-ந் தேதி மண்டல பூஜையும், வருகிற ஜனவரி மாதம் 14-ந் தேதி மகர விளக்கு பூஜையும் நடைபெறுகிறது.

இந்நிலையில், தமிழகத்திலிருந்து அய்யப்ப பக்தர்கள் சென்று வர ஏதுவாக, தமிழகத்தின் முக்கிய நகரங்களிலிருந்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் ஆண்டுதோறும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், இந்த ஆண்டு சபரிமலையில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு விழாவை ஒட்டி தமிழ்நாட்டின் பல நகரங்களில் இருந்து 60 நாட்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கவுள்ளதாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் இரா.மோகன் தகவல் தெரிவித்துள்ளார்.

அதன்படி, வருகின்ற 15ம் தேதி முதல் 16.01.2025 வரையில், (சென்னை கோயம்பேடு மற்றும் கிளாம்பாக்கம்), திருச்சி, மதுரை மற்றும் புதுச்சேரி, கடலூர் ஆகிய இடங்களிலிருந்து பம்பைக்கு, அதிநவீன சொகுசு மிதவைப் பேருந்துகள் (Ultra Deluxe) மற்றும் குளிர்சாதனமில்லா இருக்கை மற்றும் படுக்கை வசதி உள்ள (NSS) சிறப்புப் பேருந்துகளாக இயக்கப்படவுள்ளன.

மேலும், இந்த வருடம் பக்தர்கள் கூடுதலாக பயணம் செய்ய முன்வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அவற்றினை கருத்தில் கொண்டு சென்னை மற்றும் இதர இடங்களிலிருந்து கூடுதலாக பேருந்துகள் இயக்குவதற்கு அனுமதி பெறப்பட்டு சிறப்பான முறையில் பேருந்துகளை இயக்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறிப்பு:சபரிமலை தேவஸ்தானம் அறிவிப்பின்படி 27.12.2024 முதல் 30.12.2024 மாலை 5 மணி வரை கோவில் நடை சாத்தப்படுவதால் 26.12.2024 முதல் 29.12.2024 மாலை 5 மணி வரை இச்சிறப்புப் பேருந்து இயக்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 60 நாட்களுக்கு முன்னதாக இச்சிறப்புப் பேருந்துகளுக்கு ஆன்லைன் மூலமாக,www.tnstc.inமற்றும்TNSTC Official appஆகிய இணையத்தளங்களில் முன்பதிவு செய்துகொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், பேருந்துகளின் விவரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களுக்கு,9445014452, 9445014424மற்றும்9445014463ஆகிய கைப்பேசி எண்களைத் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.