அதிமுக – பா.ஜ.க. கூட்டணியால் முதல்வருக்கு காய்ச்சல்! நயினார் நாகேந்திரன் பதிலடி!

போதைப்பொருள்கள் நடமாட்டம் உள்ளது எனவே இதை மறைப்பதற்காக முதல்வர் ஓரணியில் தமிழ்நாடு என்கிற பெயரில் ஊர் ஊராக செல்கிறார் என நயினார் நாகேந்திரன் விமர்சனம் செய்து பேசியுள்ளார்.

mk stalin nainar nagendran

சென்னை :முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னையில் பேசுகையில் ” எடப்பாடி பழனிசாமி ‘தமிழகத்தை மீட்போம்’ என்று ஒரு பயணத்தைத் தொடங்கியிருக்கிறார். ஆனால், ‘தமிழ்நாடு’ என்று சொல்லக் கூடாது என்று சொல்லும் கூட்டத்துடன் இப்போது அதிமுகவையும் சேர்த்துவிட்டார். அதிமுகவை மீட்க முடியாத இவர், தமிழகத்தை மீட்கப் போகிறாராம் எனவும் “பாஜகவின் டப்பிங் வாய்சில் பேசிக்கொண்டிருந்த பழனிசாமி, தற்போது ஒரிஜினல் வாய்சில் பேசுகிறார்” எனவும் விமர்சனம் செய்து பேசியிருந்தார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் வைத்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியிருக்கிறார். இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் ” பாஜகவின் ஒரிஜினல் வாய்ஸாக எடப்பாடி செயல்படவில்லை. அவர் அவருக்கு தோணும் விஷயங்களை தான் பேசுகிறார். அதிலும் முக்கியமாக அவர் பேசவேண்டிய விஷயங்களை தான் பேசுகிறார்” என தெரிவித்தார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” முதலமைச்சரை நீங்கள் எடுத்துக்கொண்டீர்கள் என்றால் என்றைக்கு அதிமுக கூட்டணி வந்ததோ அவருக்கு காய்ச்சல் வர ஆரம்பித்துவிட்டது. அவருடய பேச்சை பார்த்தால் அவருக்கு தோல்வி பயம் வந்துவிட்டது என்று நான் நினைக்கிறேன். தினமும் பார்த்தீர்கள் என்றால் பாலியல் வன்கொடுமை செய்திகள் வந்துகொண்டு இருக்கிறது.இந்த சம்பவங்களை மறைக்க தான் ஓரணியில் தமிழ்நாடு என வைத்து ஊர் ஊராக சென்றுகொண்டு இருக்கிறார்.

ஆனால், அவர் அப்படி செல்வதால் உண்மையாகவே எந்த பயனும் இல்லை. இந்த ஆட்சியை பொறுத்தவரையில் மக்கள் வெகு ஜன விரோதி ஆட்சியாக தான் இருந்து வருகிறது. எனவே, 2026 தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி தான் ஆட்சி அமைக்கும்” எனவும் நயினார் நாகேந்திரன் நம்பிக்கை தெரிவித்தார்.