மொழி விவகாரம்: உண்மையை ஏற்பதில் உங்களுக்கு ஏன் ஈகோ? கமலுக்காக குரல் கொடுத்த சீமான்.!
கன்னட மொழி விவகாரத்தில் KGF. காந்தாரா போன்ற கன்னடப் படங்கள் தமிழகத்தில் தடங்கல் இல்லாமல் ஓடியதாக சீமான் தெரிவித்துள்ளார்.

சென்னை : கன்னட மொழி பற்றி பேசியதால் கமல் நடித்த தக் லைஃப் திரைப்படம் கர்நாடகாவில் வெளியாவதில் சிக்கல் நீடித்து வருகிறது. இது தொடர்பாக கர்நாடக நிதிமன்றத்தில் வழக்கு விசாரணை சென்றுகொண்டிருக்கிறது.
இன்று நடந்து விசாரணையில், தவறு செய்தால் மட்டுமே மன்னிப்பு கேட்க வேண்டும், தவறாக புரிந்து கொண்டதற்கு எப்படி மன்னிப்பு கேட்பது? என தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என பேசியதற்கு மன்னிப்பு கேட்க உயர்நீதிமன்றம் கெடு விதித்த நிலையில் கமல்ஹாசன் மறுப்பு தெரிவித்தார்.
மேலும், கர்நாடகாவில் தக் லைஃப் பட வெளியீட்டை ஒத்திவைப்பதாக ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் வாதம் செய்ததோடு ஒரு வாரம் கால அவகாசம் வேண்டும் என ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, கமல் மன்னிப்பு கேட்க மறுத்த நிலையில் கர்நாடகாவில் தக் லைஃப் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.
இதனிடையே, கமல்ஹாசனின் கடிதத்தை ஏற்றுக் கொள்கிறோம், கன்னட மொழி மீது உங்களுக்கு இருக்கும் மாண்பு அக்கடிதத்தின் மூலம் புரிகிறது. ஆனால் அதில் மன்னிப்பு என்ற ஒரு வார்த்தை மட்டும் இல்லை, மன்னிப்பு கேட்பதில் என்ன ஈகோ? என்று கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளது.
இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ”திராவிட மொழிகளின் தாய் தமிழ் என அனைவருக்கும் தெரியும். கன்னட மொழி குறித்து கமல் தவறாக கூறவில்லை, வாய்க்கு வந்ததை அவர் கூறவில்லை.
கன்னட மொழி குறித்து கமல்ஹாசன் பேசியதில் எந்த தவறும் இல்லை. பணமா, இனமா என்பதில் இனமே முக்கியம்; 63 நாயன்மார்கள் அல்லது ஆழ்வார்களில் யாரேனும் கன்னடர்கள் உள்ளனரா? மொழி ஆய்வாளர்கள் கூற்றைதானே கமல் பேசியுள்ளார், அவர் பேச்சில் தவறில்லை.வரலாற்றை ஏற்றுக்கொள்ள மனமில்லாமல் கமல் படத்திற்கு தடை விதித்துள்ளனர்.
தமிழில் இருந்து கன்னடம் வந்தது என்ற உண்மையை ஏற்பதில் உங்களுக்கு என்ன ஈகோ? தமிழில் இருந்து கன்னடம் வரவில்லை என்றால் அதை ஏன் பெரிதுபடுத்த வேண்டும்? வரலாற்றை படித்தவர் கமல், சித்தராமையாதான் வரலாற்றை படிக்க வேண்டும். KGF, காந்தாரா உள்ளிட்ட கன்னடப் படங்கள் தமிழகத்தில் இடையூறின்றி ஓடின” என்று தெரிவித்துள்ளார்.