“ChatGPT-ஐ அதிகம் நம்ப வேண்டாம், இந்த உண்மையைச் சொல்ல கடமைப்பட்டுள்ளேன்” – சாம் ஆல்ட்மன்.!
OpenAI தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன், ChatGPT-ஐப் பயன்படுத்தும் போது பயனர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

வாஷிங்டன் : ஓபன் ஏ.ஐ. தலைவர் சாம் ஆல்ட்மன், ”சாட்ஜிபிடி-யை மக்கள் அதிகம் நம்புவதாகவும், ஆனால் செயற்கை நுண்ணறிவு (AI) தவறான தகவல்களையும் கணிப்புகளையும் உருவாக்கக் கூடியது என்பதால் அதை முழுமையாக நம்ப வேண்டாம்” என்று அறிவுறுத்தியுள்ளார்.
இது குறித்து OpenAI இன் அதிகாரப்பூர்வ பாட்காஸ்டின் முதல் எபிசோடில் பேசிய ஆல்ட்மேன், ”AI என்பது தவறுகள் செய்யக்கூடிய ஒரு தொழில்நுட்பம் என்பதை வலியுறுத்தியுள்ளார். இது பயனர்கள் AI-இன் பதில்களை விமர்சன ரீதியாக அணுகவேண்டும் என்பதை உணர்த்துகிறது.
‘ChatGPT பல அம்சங்களைக் கொண்டுள்ளது, ஆனால் அது இன்னும் பல தவறுகளைச் செய்கிறது. ChatGPT-ஐ அதிகம் நம்ப வேண்டாம், AI தொழில்நுட்பம் தவறான தகவல்களையும், கணிப்புகளையும் உருவாக்கக் கூடியதே. AI-யும் அவ்வப்போது தவறுகள் செய்யும். இந்த உண்மையைச் சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.
ChatGPT, அது பயிற்றுவிக்கப்பட்ட தரவுகளில் உள்ள வடிவங்களின் அடிப்படையில் ஒரு வாக்கியத்தில் அடுத்த வார்த்தையை கணிப்பதன் மூலம் செயல்படுகிறது. இது உலகை மனித அர்த்தத்தில் புரிந்து கொள்ளாது, மேலும் எப்போதாவது தவறான அல்லது முற்றிலும் உருவாக்கப்பட்ட தகவல்களை உருவாக்குகிறது. AI உலகில், இது “மாயத்தோற்றம்” என்று கூறியிருக்கிறார்.
எந்தவொரு புதிய தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தும்போது எவ்வளவு கவனமாக இருக்கிறார்களோ, அதே அளவுக்கு பயனர்கள் ChatGPT போன்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும்போது கவனமாக இருக்க வேண்டும்” என்றும் கூறியுள்ளார்.