கமேனியை எளிதாக கொலை செய்ய முடியும்! பரபரப்பை கிளப்பிவிட்ட டொனால்ட் ட்ரம்ப்!
அவர்கள் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருந்தால், நாங்களும் தயார் எனவும் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன் : ஈரான் தலைநகர் டெஹ்ரான் மீது இஸ்ரேல் தொடர் வான்வழி தாக்குதல்கள் நடத்தி வரும் நிலையில், அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இப்படியான சூழலில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஈரானின் மிகப் பெரிய தலைவர் அயதுல்லா அலி கமேனியை கொன்றுவிட்டால் , இந்த மோதல் முழுவதும் முடிந்துவிடும் என்று அவர் கூறியிருந்தார்.
அவரை தொடர்ந்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமனேயை குறிவைத்து கடுமையான எச்சரிக்கை விடுத்து, சமூக வலைதளமான X-இல் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். “நாங்கள் காமனேயை எளிதாக கொலை செய்ய முடியும், அவர் எங்கு மறைந்திருக்கிறார் என்பது எங்களுக்கு தெரியும். ஆனால், எனக்கு அதைவிட மேலான திட்டம் உள்ளது,” என்று ட்ரம்ப் தனது பதிவில் குறிப்பிட்டார்.
இந்த பதிவு, இஸ்ரேல்-ஈரான் மோதல் உச்சத்தில் இருக்கும் நிலையில், மத்திய கிழக்கு பகுதியில் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. ட்ரம்பின் இந்த கருத்து, கனடாவில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டில், ஈரான் அணு ஆயுதங்களை பெறுவதை தடுக்க வேண்டும் என்று ஜி7 நாடுகள் ஒருமித்து அறிவித்ததை அடுத்து வெளியாகியுள்ளது. “ஈரானுக்கு அணு ஆயுதங்கள் இருக்கக் கூடாது.
அவர்கள் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருந்தால், நாங்களும் தயார். ஆனால், உலகின் கோரிக்கைகளை மீறினால், வரலாறு அவர்களுக்கு பாடம் புகட்டும்,” என்று ட்ரம்ப் மற்றொரு சந்தர்ப்பத்தில் கூறியிருந்தார். இதற்கு பதிலளித்த ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, “எங்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் மட்டுமே பதிலளிப்போம்,” என்று தெரிவித்தார்.
ஈரானின் வான்பரப்பை அமெரிக்கா முழுமையாக கட்டுப்படுத்துவதாகவும், தேவைப்பட்டால் துல்லியமான தாக்குதல்களை நடத்த முடியும் என்றும் ட்ரம்ப் தனது பதிவில் மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார். இது, ஈரானின் உச்ச தலைமை மீது அமெரிக்காவுக்கு உள்ள உளவுத்தகவல் திறனை வெளிப்படுத்துவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். மேலும் இந்த எச்சரிக்கை, ஈரானின் அணு ஆயுத திட்டங்கள் மற்றும் இஸ்ரேல் மீதான தாக்குதல் அச்சுறுத்தல்கள் குறித்து அமெரிக்காவின் கடுமையான நிலைப்பாட்டை வெளிப்படுத்துகிறது.
இருப்பினும், ட்ரம்பின் இந்த அறிவிப்பு ஜி7 மாநாட்டில் கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்தியதாகவும், அவர் மாநாட்டை பாதியில் விட்டு வெளியேறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படியான சூழலில் ட்ரம்ப் இப்படி ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளதால் ஈரான்-இஸ்ரேல் மோதல் மற்றும் அணு ஆயுத பேச்சுவார்த்தைகள் தொடர்பாக அமெரிக்காவின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்ன நடக்கபோகிறது என்கிற கேள்விகளையும் எழுப்பியுள்ளது.