வலுக்கும் மக்கள் போராட்டம்.., லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இரவு நேர ஊரடங்கு அறிவிப்பு.!
லாஸ் ஏஞ்சல்ஸில் போராட்டத்தில் ஈடுபடுவோர் இரவு நேரங்களில் கடைகளை கொள்ளையடிக்கும் சம்பவத்தில் ஈடுபடுவதால், இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

லாஸ் ஏஞ்சல்ஸ் : அமெரிக்காவில் சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்கும் டிரம்ப் அரசின் நடவடிக்கைக்கு எதிராக, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மக்கள் போராட்டம் வலுத்து வருகிறது.
அங்கு போராட்டத்தில் ஈடுபடுவோர் இரவு நேரங்களில் கடைகளை கொள்ளையடிக்கும் சம்பவத்தில் ஈடுபடுவதாலும், அதிகரித்து வரும் அமைதியின்மையைத் தொடர்ந்து, லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் கரேன் பாஸ் இரவு நேர ஊரடங்கு உத்தரவை அறிவித்தார்.
நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு 8 மணிக்கு தொடங்கி (புதன்கிழமை) காலை 6 மணிக்கு முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாசவேலைகளைத் தடுக்கவும், கொள்ளையடிக்கப்படுவதைத் தடுக்கவும், லாஸ் ஏஞ்சல்ஸ் நகர மையத்தில் நான் உள்ளூர் அவசரநிலையை அறிவித்து ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளேன்,” என்று லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் செய்தியாளர் கூட்டத்தில் இதனை அறிவித்தார்.
ஊரடங்கு உத்தரவை மீறும் நபர்களை சட்ட அமலாக்க அதிகாரிகள் கைது செய்வார்கள், மேலும் அவர்கள் மீது வழக்குத் தொடரப்படும் என எச்சரித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை முதல், எதிர்ப்பாளர்கள் சட்ட அமலாக்க அதிகாரிகளுடன் மோதியுள்ளனர், இதன் விளைவாக கிட்டத்தட்ட 200 பேர் கைது செய்யப்பட்டதாக CBS செய்திகள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அதிகரித்த போராட்டங்களை தடுக்கஆயிரக்கணக்கான கலிபோர்னியா தேசிய காவல்படையினரையும் 700 அமெரிக்க கடற்படையினரையும் நிறுத்தினார். இந்த நடவடிக்கை கலிபோர்னியா ஆளுநர் கவின் நியூசமின் ஒப்புதல் இல்லாமல் எடுக்கப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்புகளும் வழக்கும் தொடரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.