சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!
சென்னையில் இருந்து இலங்கை சென்ற விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள் இருந்ததாக வெளியான தகவலால் இலங்கை விமான நிலையத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத அமைப்பான TRF எனும் அமைப்பு நடத்தியதாக பொறுப்பேற்றது என்றும், இது பாகிஸ்தானில் செயல்படும் லஷ்கர் இ தொய்பா எனும் பயங்கரவாத அமைப்பின் ஆதரவு இயக்கம் என்றும் செய்திகள் வெளியாகின.
இந்த தாக்குதலை அடுத்து, இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகமாகியுள்ள நிலையில், தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகளை இந்தியா, பாகிஸ்தான் இணைந்து கண்டறிய வேண்டும் என அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இப்படியான சூழலில், இன்று (மே 3) சென்னையில் இருந்து இலங்கை சென்ற விமானத்தில் பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதிகள் சென்றதாக தகவல் கிடைக்க, இந்த தகவல் இலங்கை விமான நிலையத்திற்கு பகிரப்பட்டு அங்கு பயணிகளிடம் சோதனை தீவிரப்படுத்தப்பட்டது.
சென்னை விமான நிலையத்தில் இருந்து இலங்கை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் வரை சென்ற UL122 எனும் விமானத்தில் பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய நபர்கள் இருப்பதாக சென்னை விமான நிலையத்திற்கு தகவல் கிடைத்ததாகவும், அந்த தகவலை இங்குள்ள அதிகாரிகள் இலங்கை விமான நிலைய அதிகாரிகளிடம் கூறியதாகவும் கூறப்படுகிறது.
இதனை அடுத்து பண்டாரநாயக்க விமான நிலையத்தில் அனைத்து பயணிகளிடமும் சோதனை தீவிரப்படுத்தப்பட்டது. இச்சோதனையின் காரணமாக இலங்கை விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் செல்ல இருந்த விமானம் குறிப்பிட்ட நேரத்தை விட தாமதமாக புறப்பட்டது.