“கப் தான் டார்கெட்”…பஞ்சாப்பை நொறுக்கி ஃபைனலுக்கு முன்னேறிய பெங்களூர்!
பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூர் அணி வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

சண்டிகர் : நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் முதல் குவாலிஃபயர் போட்டி இன்று மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் முதலில் டாஸ் வென்ற பெங்களூர் அணி நாங்கள் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்கிறோம் என பஞ்சாப் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி என்கிற வகையில் விளையாடியாது என்று சொல்லலாம்.
தொடக்கத்தில் இருந்தே தடுமாறி விளையாடி வந்த பஞ்சாப் அணி 14.1 ஓவர்களில் 10 விக்கெட் இழப்பிற்கு 101 ரன்கள் மட்டுமே எடுத்தது. பெங்களூர் அணியின் பந்துவீச்சை பொறுத்தவரையில் அதிகபட்சமாக ஜோஷ் ஹேசில்வுட், சுயாஷ் சர்மா ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்கள்.
அடுத்ததாக 102 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றால் இறுதிப்போட்டிக்கு முன்னேறிவிடலாம் என்ற நோக்கத்தோடு பெங்களூர் அணி களமிறங்கியது. வழக்கம் போல சேஸ் மாஸ்டர் விராட் கோலி களத்தில் நின்று போட்டியை முடித்து கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் 12 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அவர் ஆட்டமிழந்தாலும் நான் பாத்துக்கொள்கிறேன் என்பது போல சால்ட் அதிரடியாக விளையாடினார்.
அவருடைய அரை சதம் காரணமாக பெங்களூர் அணி 10 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த வெற்றிபெற்றதன் மூலம் பெங்களூர் அணி நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) ஐபிஎல் தொடரில் இதுவரை மூன்று முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. அதன்படி, கடந்த 2009 – ஆம் ஆண்டு ஒருமுறை, டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு எதிராக இறுதிப்போட்டியில் தோல்வியடைந்தது. 2011-ஆம் ஆண்டு ஒருமுறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக இறுதிப்போட்டியில் தோல்வியடைந்தது. 2016-ஆம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக இறுதிப்போட்டியில் தோல்வியடைந்தது.
மூன்று முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறியும் ஒரு முறை கூட வெற்றிபெற்று கோப்பையை வெல்லவில்லை எனவே, இந்தமுறை கோப்பையை வெல்லுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.