முஸ்தபிசுர் ரஹ்மானை தூக்கிய கொல்கத்தா...ஐபிஎல் போட்டி ஒளிபரப்பை தடை செய்த வங்கதேச அரசு?

முஸ்தாபிசுர் ரஹ்மான் நீக்கப்பட்ட பிறகு வங்கதேசத்தில் ஐபிஎல் 2026 ஒளிபரப்பு தடைசெய்யப்பட்டதால் பிசிசிஐக்கு மோசமான செய்தியாக அமைந்துள்ளது.

IPL 2026 telecast banned in Bangladesh

கொல்கத்தா :ஐபிஎல் 2026 சீசனுக்கு ரூ.9.20 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணியால் வாங்கப்பட்ட வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மான் அணியில் இருந்து திடீரென நீக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. BCCI உத்தரவின்படி KKR அணி அவரை விடுவித்துள்ளது. இதற்கு காரணமாக இந்தியா – வங்கதேச உறவில் ஏற்பட்ட பதற்றம் காட்டப்படுகிறது. இதனால் வங்கதேசத்தில் IPL 2026 போட்டிகளின் ஒளிபரப்பு முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

BCCI செயலாளர் தேவஜித் சைகியா, “சமீபத்திய நிகழ்வுகளை கருத்தில் கொண்டு KKR அணியிடம் முஸ்தபிசுரை விடுவிக்கச் சொல்லியுள்ளோம். மாற்று வீரருக்கு அனுமதி கோரினால் வழங்கப்படும்” என்று தெரிவித்தார். முஸ்தபிசுர் இந்த சீசனில் IPL-யில் பங்கேற்க மாட்டார் என்று உறுதியாகியுள்ளது. KKR உரிமையாளர் ஷாருக்கான் இதனால் “தேசத்துரோகி” என்று விமர்சிக்கப்பட்டு வருகிறார்.

வங்கதேச அரசு வெளியிட்ட அறிக்கையில், “BCCI-யின் இந்த முடிவுக்கு எந்த நியாயமான காரணமும் தெரியவில்லை. இது வங்கதேச மக்களை வேதனைப்படுத்தியுள்ளது. எனவே IPL போட்டிகள் மற்றும் நிகழ்ச்சிகளின் ஒளிபரப்பு முற்றிலும் தடை செய்யப்படுகிறது” என்று அறிவித்துள்ளது. இந்தத் தடை பொது நலன் கருதி விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.இதனால் வங்கதேச கிரிக்கெட் வாரியம் (BCB) அடுத்த மாதம் இந்தியாவில் நடக்கும் ஆடவர் டி20 உலகக் கோப்பைக்கு அணியை அனுப்ப மாட்டோம் என்று அறிவித்துள்ளது.

வங்கதேசத்தின் லீக் போட்டிகளை இந்தியாவுக்கு வெளியே நடத்துமாறு ICC-யிடம் கோரிக்கை வைத்துள்ளது. வங்கதேச அணியின் போட்டிகள் கொல்கத்தா மற்றும் மும்பையில் நடக்க உள்ளன. இந்தச் சர்ச்சை இந்தியா – வங்கதேச கிரிக்கெட் உறவில் பெரும் பிளவை ஏற்படுத்தியுள்ளது. வங்கதேசத்தில் இந்து சிறுபான்மையினர் மீதான வன்முறை குறித்த கவலை காரணமாக BCCI இந்த முடிவை எடுத்ததாகத் தெரிகிறது.

IPL 2026-ன் ஒளிபரப்பு உரிமைகள் மற்றும் ரசிகர்கள் பார்வைக்கு இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.இந்த நிகழ்வு இரு நாடுகளுக்கு இடையிலான அரசியல், விளையாட்டு உறவில் புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. BCCI மாற்று வீரரை அனுமதிக்கும் என்றாலும், KKR அணியின் உத்தி மாற வாய்ப்புள்ளது. வங்கதேச ரசிகர்கள் IPL-யைப் புறக்கணிக்கும் நிலை உருவாகியுள்ளது.