தமிழகத்தில் இந்த 9 மாவட்டங்களில் இன்று ஆரஞ்சு அலர்ட்!

ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், பெரம்பலூர், ஆகிய 9 மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

orange alert chennai

சென்னை :தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் “ஃபெஞ்சல்” புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (30-11-2024) காலை 830 மணி அளவில் அதே பகுதிகளில் புயலாக, புதுவையிலிருந்து சுமார் கிழக்கு-வடகிழக்கே 120 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து தென்கிழக்கே 110 கிலோ மீட்டர் தொலைவிலும், நாகபட்டினத்திலிருந்து வடக்கு-வடகிழக்கே 200 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

இது மேற்கு திசையில் நகர்ந்து வடதமிழக – புதுவை கடற்கரையை காரைக்காலிற்கும் – மகாபலிபுரத்திற்கும் இடையே, புதுவைக்கு அருகே நாளை புயலாக கடக்கக்கூடும். அச்சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

இதன் காரணமாக, தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் புதுவையில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழைக்கும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும் வாய்ப்புள்ளது.

அதைப்போல, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வாய்ப்பு இருப்பதாக கூறி ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.