நிமிஷா பிரியா வழக்கு : “கொலையை நியாப்படுத்த முடியாது..தண்டிக்கப்படணும்” இறந்தவரின் சகோதரர் பேச்சு!
உண்மையை திரித்து, நிமிஷாவை இந்திய ஊடகங்கள் பாதிக்கப்பட்டவராக காட்டுவது வேதனை அளிக்கிறது என தலால் அப்தோ மஹ்தி சகோதரர் அப்தெல் ஃபத்தா மஹ்தி தெரிவித்துள்ளார்.

டெல்லி : ஏமனில் கடந்த 2017-ம் ஆண்டு தலால் அப்தோ மஹ்தி என்பவரைக் கொலை செய்த வழக்கில் குற்றவாளியாகக் கருதப்பட்டு கேரளாவைச் சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு 2020-ல் ஏமன் தலைநகர் சனாவில் உள்ள நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது, இது 2023-ல் யேமன் உச்சநீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டது. இந்த தண்டனை ஜூலை 16, 2025 அன்று நிறைவேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கடைசி நிமிடத்தில் இந்த மரண தண்டனை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
இந்த சூழலில், உயிரிழந்த மஹ்தியின் சகோதரர் அப்தெல் ஃபத்தா மஹ்தி, “கொலையை நியாப்படுத்த முடியாது கண்டிப்பாக அவருக்கு தண்டனை வழங்கப்படவேண்டும்” என ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சற்று வேதனையுடன் பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் “எங்களின் நிலைப்பாடு, இஸ்லாமிய சட்டப்படி (கிசாஸ்) தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்பதே. வேறு எதையும் நாங்கள் ஏற்க மாட்டோம்.”
நிமிஷாவுக்கு இஸ்லாமிய சட்டப்படி தண்டனை வழங்கப்பட வேண்டும். அதற்கு குறைவாக எதையும் ஏற்க மாட்டோம். இந்த கொடூரமான குற்றத்தால் எங்கள் குடும்பம் நீண்ட காலமாக வேதனை அனுபவித்து வருகிறது. நிமிஷாவின் பாஸ்போர்ட்டை தலால் பறித்ததாகவோ, அவர் மீது வைக்கப்பட்ட பிற குற்றச்சாட்டுகளுக்கோ எந்த ஆதாரமும் இல்லை. அப்படியாக பரவும் செய்திகள் அனைத்தும் வதந்தியாக பரவும் செய்தி தான்” எனவும் விளக்கம் அளித்தார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர் இந்திய ஊடகங்கள் நிமிஷாவை பாதிக்கப்பட்டவராக சித்தரித்து, பொதுமக்கள் மனதை திசை திருப்புவதாகவும் குற்றம்சாட்டினார். “உண்மையை திரித்து, நிமிஷாவை இந்திய ஊடகங்கள் பாதிக்கப்பட்டவராக காட்டுவது வேதனை அளிக்கிறது. எந்தவொரு குற்றத்தையும், அதன் காரணம் எதுவாக இருந்தாலும், கொலைக்கு நியாயமாக ஏற்க முடியாது,” என்றும் அப்தெல் ஃபத்தா மஹ்தி கூறினார்.
மேலும், இந்த வழக்கில் பத்தாவது மற்றும் தற்போதைய கிராண்ட் முஃப்தி ஷேக் அபூபக்ர், ஏமனில் உள்ள முக்கிய இஸ்லாமிய அறிஞர்களைத் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தி இஸ்லாம் மனிதநேயத்துக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கிறது. இந்தப் பெண்ணின் உயிரைக் காப்பாற்ற முயற்சி செய்யுங்கள்” என்று கேட்டுக்கொண்ட காரணத்தால் தான் நிமிஷா பிரியாவுக்கு ஆறுதலாக, ஜூலை 16, 2025 அன்று நடைபெறவிருந்த அவரது மரண தண்டனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இப்போது, மஹ்தியின் குடும்பம் ‘தயா’ (blood money) எனப்படும் இழப்பீட்டுத் தொகையை ஏற்று, மன்னிப்பு வழங்க ஒப்புக்கொள்ளுமா என்பதைப் பொறுத்தே நிமிஷாவின் எதிர்காலம் உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
“நடந்து முடிந்த குரூப் – 4 தேர்வை ரத்து செய்துவிட்டு, மறு தேர்வு நடத்த வேண்டும்” – தவெக பொதுச்செயலாளர்.!
July 17, 2025
எரிபொருள் சப்ளை ஸ்விட்சுகளை கேப்டன் ஆஃப் செய்தாரா? – இந்திய விமானிகள் சங்கம் கண்டனம்.!
July 17, 2025