“சினிமாவில் பல நாட்களாக போதைப்பொருள் உள்ளது” – நடிகர் விஜய் ஆண்டனி பளிச்.!
திரையுலகில் போதைப்பொருள் பயன்பாடு நீண்ட நாட்களாகவே உள்ளது என இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.

சென்னை : இயக்குநர் லியோ ஜான் பால் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் ”மார்கன்” திரைபடம் ஜூன் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், ‘மார்கன்’ படத்தின் புரோமோஷன் நேற்று மதுரையில் நடைபெற்றது.
இந்த புரோமோஷன் நிகழ்வு முடிந்த பின், செய்தியாளர் சந்திப்பின் போது, சினிமாவில் போதைப்பொருட்கள் பயன்பாடு குறித்த கேள்விக்கு விஜய் ஆண்டனி பதிலளிக்கையில், “போதைப்பொருட்கள் பயன்பாடு பல நாட்களாகவே உள்ளது. இந்தக் கூட்டத்தில் கூட யாராவது இருக்கலாம்” என்றார்.
ஏற்கனவே, நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டது தமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் நடிகர் கிருஷ்ணா உள்ளிட்ட பலரும் விசாரணை வளையத்தில் உள்ளனர். இந்த சூழலில், இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி, திரையுலகில் போதைப்பொருள் பயன்பாடு நீண்ட காலமாக இருப்பதாகக் கூறியிருப்பது, திரைத் துறையில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
இந்த விவகாரம் திரையுலகத்திற்கு மட்டுமல்ல, சமூகத்தின் பல பகுதிகளுக்கும் பொருந்தக்கூடிய ஒரு பொதுப் பிரச்சினையாக உள்ளது. இதனால், விஜய் ஆண்டனியின் இந்தக் கருத்து, இத்தகைய பிரச்சினைகளை வெளிப்படையாகப் பேசுவதற்கும், திரையுலகில் ஆரோக்கியமான பணிச்சூழலை உருவாக்குவதற்கும் ஒரு தொடக்கமாக இருக்கலாம்.
அரசியலுக்கு வருவேனா? என்ற கேள்விக்கு பதிலளித்த இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, ”நான் அரசியலுக்கு வருவதற்கான வாய்ப்புகள் இல்லை, நடிகர்கள் நாடாளக்கூடாது என்பது விதியல்ல. மக்கள் ஆதரவு இருந்தால் ஆளலாம். சினிமாவில் போதைப்பொருள் பயன்பாடு இன்று, நேற்றல்ல, பல நாட்களாக உள்ளன. எத்தனை AI-க்கள் வந்தாலும் இதயத்தை தொடும் பாடல்களை அவற்றால் உருவாக்க முடியாது” என்றார்.