ஆந்திரப் பிரதேசம்:திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி தரிசனத்துக்கான இலவச டோக்கன் வழங்கும் மையங்களில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக தமிழகத்தை சேர்ந்த ஒருவர் உட்பட மொத்தம் 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சோக சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள் பலரும் வருத்தத்தை தெரிவித்து வருகிறார்கள்.
தற்பொழுது, கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பக்தர்கள் உட்பட அப்பாவி மக்கள் உயிரிழந்த சம்பவம் வேதனை அளிக்கிறது. இந்த எதிர்பாராத துயர சம்பவத்தில் தங்கள் உறவுகளை இழந்த குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன்”என்று குறிப்பிட்டுள்ளார்.
unknown nodeஇதனிடையே, கூட்ட நெரிசலில் 6 பேர் பலியான சம்பவத்திற்கு திருப்பதி திருமலை தேவஸ்தானம் மன்னிப்பு கோரியுள்ளது. கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்து சிகிச்சை பெறுவோரை தேவஸ்தான தலைவர் பிஆர் நாயுடு சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூட்ட நெரிசல் நேரிட்டது மிகுந்த துரதிருஷ்டவசமானது எனக் குறிப்பிட்டார். அதிகம் கூட்டம் கூடியதே நெரிசல் ஏற்பட்டதற்கு காரணம் என்றும் அவர் தெரிவித்தார்
மேலும், இந்த சம்பவத்திற்கு ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு வேதனை தெரிவித்துள்ளார். டோக்கன் விநியோகத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலியானது குறித்து கேள்விப்பட்டு மிகுந்த அதிர்ச்சியடைந்ததாக அவர் கூறியுள்ளார். கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்தோருக்கு உயர்தர சிகிச்சை அளிக்க அதிகாரிகளுக்கு தாம் உத்தரவிட்டு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
