டெல்லி :இந்தியாவிற்கு விவசாயிகள் நலன் தான் முக்கியம் என்று கூறியுள்ள பிரதமர் மோடி, அமெரிக்காவின் சவாலை ஏற்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்திய விவசாயப் பொருட்கள் மீதான இறக்குமதி வரியை அமெரிக்கா 50% அதிகரித்துள்ள நிலையில், இந்த விஷயம் பெரிதும் பேசுபொருளாக மாறியிருக்கிறது.
புகழ்பெற்ற வேளாண் விஞ்ஞானி டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதனின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவில் ஏற்பாடு செய்யப்பட்ட மூன்று நாள் உலகளாவிய மாநாட்டின் தொடக்க விழாவில் பிரதமர் மோடி இவ்வாறு கூறினார். இது இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
இந்திய விவசாயிகளின் நலனுக்காக எவ்வளவு விலை கொடுக்கவும் மத்திய அரசு தயார், விவசாயிகளை கைவிடப்போவதில்லை என பிரதமர் மோடி திட்டவட்டமாக கூறியுள்ளார். டெல்லியில் நடைபெற்ற எம்.எஸ். சுவாமிநாதன் நூற்றாண்டு சர்வதேச மாநாட்டில் பேசிய அவர், ”பருத்தி, சோளம் மற்றும் சோயா பீன்ஸ்களை இந்தியாவில் விற்பனை செய்ய அனுமதி கேட்கிறது அமெரிக்க அரசு.
ஆனால், அமெரிக்காவின் பருத்தி, சோளம், சோயாவை இறக்குமதி செய்தால் இந்திய விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் அமெரிக்க வேளாண் பொருள் இறக்குமதிக்கு சம்மதம் இல்லை. இந்திய விவசாயிகள் நலனில் ஒரு போதும் மத்திய அரசு சமரசம் செய்து கொள்ளாது, இந்திய விவசாயிகளின் நலனுக்கே எப்போதும் மத்திய அரசு மிகவும் முன்னுரிமை கொடுக்கும். விவசாயிகளின் நலனுக்காக என்னுடைய தனிப்பட்ட நலன்களில் எவ்வளவு பாதிப்பு ஏற்பட்டாலும் பரவாயில்லை” என பிரதமர் மோடி திட்டவட்டமாக கூறியுள்ளார்.
