சென்னையில் 9 வயது சிறுவனுக்கு கொரோனா தொற்று உறுதி.!
சென்னையில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதால், சுகாதாரத் துறை பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

சென்னை : இந்தியாவில் இன்று காலை நிலவரப்படி, 3,961 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவில், குறிப்பாக சென்னை, மும்பை, மற்றும் அகமதாபாத் போன்ற நகரங்களில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதாகக் குறிப்பிடுகின்றன. சென்னை உள்ளிட்ட பல இந்திய நகரங்களில் புதிய கொரோனா வைரஸ் திரிபுகளான NB.1.8.1 மற்றும் LF.7 ஆகியவை கண்டறியப்பட்டுள்ளன. இந்த திரிபுகள் அதிக பரவும் தன்மை கொண்டவையாக இருந்தாலும், இவை கடுமையான நோயை ஏற்படுத்தவில்லை என்று உலக சுகாதார அமைப்புகள் கண்காணித்து வருகின்றன.
தற்பொழுது, சென்னை பள்ளிக்கரணை அம்பாள் நகரைச் சேர்ந்த 9 வயது சிறுவனுக்கு கொரோனா தொற்று இருப்பது ஆய்வில் உறுதியானதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், மருத்துவர்களின் அறிவுறுத்தலின் படி தொற்று பாதித்த சிறுவன் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
ஏற்கனவே, கொரோனா பரவல் எதிரொலி காரணமாகப் பொது இடங்களில் முகக் கவசம் அணிய வேண்டும் என்று தமிழ்நாடு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. கொரோனா தொற்று தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன், ”புதிய கொரோனா வீரியம் அற்ற வைரஸ், கொரோனா குறித்து மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்.உயிர் பாதிப்பை ஏற்படுத்தாது என்பதால் பெரிய அளவிலான கட்டுப்பாடுகள் இல்லை என்று கூறியுள்ளார்.