அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கு : “ஞானசேகரன் தான் குற்றவாளி” – நீதிமன்றம் தீர்ப்பு!
ஞானசேகரன் மீதான 11 குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டுள்ளது என நீதிபதி ராஜலட்சுமி தெரிவித்துள்ளார்.

சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 23 அன்று ஒரு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் ஞானசேகரன் என்ற நபர் கைது செய்யப்பட்டிருந்தார். இந்த வழக்கானது சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.
மாணவியின் புகாரின் அடிப்படையில், காவல்துறை உடனடியாக வழக்குப் பதிவு செய்து, மூன்று பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பாதிக்கப்பட்ட மாணவி கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், இதையடுத்து, ஞானசேகரன் மீது பாலியல் வன்கொடுமை, மிரட்டல், ஆதாரங்களை அழித்தல் உள்ளிட்ட 12 பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
சிறப்பு புலனாய்வுக் குழு 20 சாட்சிகளிடம் விசாரணை நடத்தி, 100 பக்க குற்றப்பத்திரிகையை மகளிர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. ஞானசேகரன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட விடுதலை மனு ஏப்ரல் 8, 2025 அன்று தள்ளுபடி செய்யப்பட்டது. அதன்பின், சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கில் தாமாக முன்வந்து விசாரணைக்கு உத்தரவிட்டது மற்றும் மாணவிக்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டது.
இருப்பினும், இந்த வழக்கில் இன்னும் தீர்ப்பு வராமல் இருந்த நிலையில், 5 மாத விசாரணைக்கு பிறகு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் எந்த தீர்ப்பு வழங்கப்படவுள்ளது என்று தமிழகம் முழுவதும் எதிர்பார்ப்புகள் எழுந்த நிலையில் காலை போலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஞானசேகரன் ஆஜர் செய்யப்பட்டார்.
ஆஜர் செய்யப்பட்டதை தொடர்ந்து சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ராஜலட்சுமி தீர்ப்பை வழங்கினார். அதன்படி, இந்த வழக்கில் குற்றவாளி ஞானசேகரன் தான் என அதிரடியாக நீதிமன்றம் அறிவித்தது. ஞானசேகரன் மீதான 11 குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டுள்ளது என்பதால் அவரை குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்துள்ளது. தண்டனை விவரங்கள் வரும் ஜூன் 2-ஆம் தேதி அறிவிக்கப்படும் எனவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.