அண்ணா பல்கலை பாலியல் வழக்கு – ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை!
அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டிருந்த ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை : கடந்த ஆண்டு டிசம்பர் 23 அன்று அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட அந்த மாணவி தைரியமாக முன் வந்து புகார் அளித்த நிலையில், வழக்குப்பதிவு செய்து காவல்துறை விசாரணை நடத்தியதில் ஞானசேகரன் என்ற நபர் கைது செய்யப்பட்டிருந்தார்.
மாணவியின் புகாரின் அடிப்படையில், காவல்துறை உடனடியாக வழக்குப் பதிவு செய்து, மூன்று பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பாதிக்கப்பட்ட மாணவி கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், இதையடுத்து, ஞானசேகரன் மீது பாலியல் வன்கொடுமை, மிரட்டல், ஆதாரங்களை அழித்தல் உள்ளிட்ட 12 பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
சிறப்பு புலனாய்வுக் குழு 20 சாட்சிகளிடம் விசாரணை நடத்தி, 100 பக்க குற்றப்பத்திரிகையை மகளிர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. ஞானசேகரன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட விடுதலை மனு ஏப்ரல் 8, 2025 அன்று தள்ளுபடி செய்யப்பட்டது. அதன்பின், சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கில் தாமாக முன்வந்து விசாரணைக்கு உத்தரவிட்டது மற்றும் மாணவிக்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டது.
இதனை தொடர்ந்து இந்த வழக்கில் ஞானசேகரன் தான் குற்றவாளி என கடந்த மே 28-ஆம் தேதி சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஞானசேகரன் மீதான 11 குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டுள்ளது என்பதால் அவரை குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்ததோடு அவருக்கு வழங்கப்படும் தண்டனை விவரம் வரும் ஜூன் 2-ஆம் தேதி அறிவிக்கப்படும் எனவும் கூறப்பட்டது.
எனவே, இந்த வழக்கில் குற்றவாளி ஞானசேகரனுக்கு என்ன தண்டனை வழங்கப்படவுள்ளது என்கிற எதிர்பார்ப்புகள் எழுந்த நிலையில், இன்று காலை நீதிமன்றத்தில் ஞானசேகரன் ஆஜர் செய்யப்பட்டார். அதனைத்தொடர்ந்து அவருக்கு வழங்கப்படவுள்ள தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட்டது. அதன்படி,11 பிரிவுகளில் குற்றச்சாட்டு நிரூபணமான நிலையில் ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 30 ஆண்டுகளுக்கு குறையாத ஆயுள் தண்டனையுடன், ரூ 90,000 அபராதம் விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.