பயணிகள் கவனத்திற்கு: சென்னை மாநகர பேருந்துகள் – போக்குவரத்து மாற்றம்.! முழு விவரம்...

சென்னையில் மழைநீர் தேங்கிய பகுதிகளில் MTC பேருந்துகள் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அம்மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

Chennai Transport

சென்னை :தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முதலாக மழை பெய்து வருகிறது. அதில், சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் நேற்றிரவு தொடங்கிய கனமழை, இப்போது வரை நீடித்து வருகிறது.

இதனிடையே, சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் இன்றும், நாளையும் அதி கனமழைக்கான RED ALERT விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னையில் மழைநீர் தேங்கிய பகுதிகளில் MTC பேருந்துகள் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அறிக்கையில், “ஓ.எம்.ஆர் சாலையில் பெருங்குடி, கந்தன்சாவடி ஆகிய பகுதியில் மழை நீர் தேங்கியுள்ளதால் அவ்வழியாக செல்லும் பேருந்துகள் SRP, தரமணி, வேளச்சேரி, காமாட்சி மருத்துவமனை, ரேடியல் சாலை வழியாக சென்று துரைப்பாக்கம் சந்திப்பில் மீண்டும் ஓ.எம்.ஆர் சாலையில் தற்காலிகமாக இயக்கப்படுகிறது.

100அடி சாலையில், MMDA காலனி திரு நகர் அருகில் மழை நீர் தேங்கியுள்ளதால் அவ்வழியே கோயம்பேடு பேருந்து நிலையம் வரை இயங்கும் பேருந்துகள் வடபழனி பேருந்து நிலையம் வரை மட்டுமே இயக்கப்படுகிறது.

ஆவடி, அம்பத்தூரில் இருந்து கிண்டி மார்க்கமாக வரும் பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையம் வரை மட்டுமே தற்காலிகமாக இயக்கப்படுகிறது.

கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து கிளாம்பாக்கம், கூடுவாஞ்சேரி செல்லும் பயணிகள் தடம் எண் 104C மற்றும் 104CX ஆகியவற்றை பயன்படுத்தி கொள்ளவும்” இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.