கடலூர்: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது கடலூருக்கு சென்றுள்ளார். அங்கு பல்வேறு முடிவுற்ற மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் புதிய நலத்திட்டங்களை தொடங்கி வைத்த வருகிறார். அவ்வாறு தற்போது கடலூரில் நடைபெற்று வரும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில் கடலூருக்கு புதிய 10 திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரிசையாக அறிவித்தார்.
முதலமைச்சர் அறிவித்த 10 அறிவிப்புகள் :
திட்டக்குடி, விருத்தாச்சலம் பகுதியில் உள்ள வேளாண் மக்கள் பயன்பெறும் வகையில் வெலிங்டன் ஏரி கரைகள் பலப்படுத்தப்படும். அப்பகுதி வாய்க்கால்கள் புனரமைக்கப்படும். இப்பணிகளுக்காக ரூ.130 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
கடலூர் மாநகரட்சிக்கு உட்பட்ட மஞ்சள்குப்பம் மைதானம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் ரூ.35 கோடி செலவீட்டில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மேம்படுத்தப்படும்.
பண்ருட்டி தொகுதியில் ரூ.15 கோடி செலவீட்டில் அரசு கலை கல்லூரி அமைக்கப்படும். இந்த கோரிக்கையை தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் அடிக்கடி சட்டமன்றத்தில் எழுப்பினார் என முதலமைச்சர் குறிப்பிட்டார்.
உபயகிரி – சிதம்பரம் பகுதியில், முட்லூரில் இருந்து சேத்தியாத்தோப்பு வழியில் உள்ள 2 வழிச் சாலை, 4 வழிச்சாலையானது ரூ.50 கோடி செலவில் அமைக்கப்படும்.
நெய்வேலி பகுதியில் கெடிலம் ஆற்றங்கரையில் செம்மேடு, சிறுவாச்சூர், இலந்தப்பட்டி கிராம பகுதியில் ரூ.36 கோடி செலவில் வெள்ளத்தடுப்பு மற்றும் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.
திருவந்திபுரம் கோயில் பகுதியில் உள்ள திருவந்திபுரம் – எம்.புதூர் பகுதி சாலை ரூ.7 கோடி செலவில் மேம்பாடு செய்யப்படும்.
குறிஞ்சிப்பாடி பகுதியில் புதிய வட்டாச்சியர் அலுவலகம் ரூ.6.5 கோடி செலவில் கட்டித்தரப்படும்.
காட்டுமன்னார்கோயில், சிதம்பரம், புவனகிரி பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் வீராணம் ஏரி மேம்படுத்தப்படும். இதற்காக ரூ.63.52 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
கடலூர் பகுதியில் பருவமழை வெள்ள பாதிப்புகளை எதிர்கொள்ள தென்பெண்ணை ஆற்றங்கரை பகுதியில் ரூ.57 கோடி செலவில் வெள்ளதடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.
உலக தாய்மொழி தினமான இன்று. தமிழ் மொழிக்காக உயிரிழந்த மாணவர் இராசேந்திரனின் நினைவிடம் புதுப்பிக்கப்படும்.
ஆகிய முக்கிய 10 அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடலூரில் அறிவித்தார்.
