“திராவிடர்கள் என்றாலே தொழிலாளர்கள் தான்!” மு.க.ஸ்டாலின் பெருமிதம்!   

திராவிடர்கள் என்றாலே தொழிலாளர்கள் தான் என தந்தை பெரியார் கூறியதை குறிப்பிட்டு மே தின நிகழ்ச்சியில் பேசினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

CM MK Stalin speech in May Day function

சென்னை : இன்று மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு சென்னை சிந்தாதரிபேட்டையில் உள்ள மே தின பூங்காவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் உள்ளிட்டோர் நேரில் உழைப்பாளர் சிலைக்கு மரியாதை செலுத்தினர். அதன் பிறகு நடைபெற்ற நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ” மே 1ஆம் தேதியை தொழிலாளர் தினமாக கொண்டாடி வருகிறோம். உழைக்கும் பலரும் தொழிலாளர்கள் தான். மிட்டா மிராசுதாரர்களின் வாழ்க்கையை உருவாக்கி தருபவரும் தொழிலாளர் தான். அத்தகைய தொழிலாளர்களை கொண்டாடக்கூடிய தினம் தான் மே தினம் என அண்ணா சுட்டி காட்டியுள்ளார். மே 1-ல் தங்கள் உரிமைகளை வென்றெடுத்த உலக தொழிலாளர்கள் அனைவருக்கும் உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்.

திராவிடர்கள் என்றாலே அவர்கள் தொழிலாளர்கள் என கூறியவர் தந்தை பெரியார். 1937ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்ட அறிக்கையை தமிழ்நாட்டில் வெளியிட்டவர் தந்தை பெரியார்.  ரஷ்யா போன்ற பல நாடுகளுக்கு சென்றுவிட்டு தாயகம் திரும்பிய பெரியார், இனி அனைவரையும் தோழர் என்று தான் அழைக்க வேண்டும் என கூறினார்.

20 நூற்றாண்டின் தொடக்கத்திலேயே மே நாளில் நகரங்கள், கிராமங்கள் என அனைத்து இடங்களிலும் இசை நிகழ்ச்சி போட்டு கொண்டாடினோம். சென்னை அப்போது இருந்தே தொழிலர்சங்க மையமாக விளங்கி வருகிறது. 8 மணி நேரம் வேலை என கொண்டு வந்ததை இந்தியாயாவிலேயே முதல் முறையாக சென்னையில் சிந்தனை சிற்பி சிங்காரவேலன் தலைமையில் மே தினம் கொண்டாடப்பட்டது.

1967ஆம் ஆண்டு திமுக ஆட்சி வெற்றி பெற்று அறிஞர் அண்ணா தலைமையில் ஆட்சி அமைந்ததும், மே 1ஆம் தேதி ஊதியத்துடன் விடுமுறை அறிவித்தார். கலைஞர்தனது ஆட்சியில் அதனை கட்டாயமாக்கி சட்டம் இயற்றினார். பிறகு வி.பி சிங் பிரதமராக இருந்த போது மே 1ஆம் தேதி இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலத்திலும் ஊதியத்துடன் கூடிய விடுமுறையை நிறைவேற்றம் செய்தார்.  இப்போது இங்கு இருக்கும் மே தின பூங்காவை உருவாக்கியவரும் கலைஞர் தான்.

கடந்த 4 ஆண்டுகால ஆட்சியில் தொழிலாளர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்லபடுத்தி உள்ளோம். சுமார் 28,87,300 அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.2,467 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கி உள்ளோம். உணவு உள்ளிட்ட பிற பொருட்களை டெலிவெரி செய்யும் தொழிலாளர்கள், உப்பள தொழிலார்களுக்கு பணி நல வாரியம் அமைத்துள்ளோம். பட்டாசு விபத்தில் உயிரிழக்கும் தொழிலாளர்களின் குழந்தைகளின் படிப்பு செலவுகளை அரசு ஏற்று வருகிறது. அமைப்பு சாரா தொழிலாளர்கள் 2024-ல் 14 லட்சம் ஊழியர்கள் புதியதாக பதிவு செய்துள்ளனர். கடைகளில் அனைவர்க்கும் சேர் போட்டு தொழிலாளர்களை உட்கார வைக்க வேண்டும் என்ற உரிமையை கட்டாயமாக்கியுள்ளோம்.

தமிழ்நாட்டில் புதியதாக எந்த தொழிலை ஒரு நிறுவனம் தொடங்க வந்தாலும் அவர்களிடம் நான் கேட்கும் முதல் கேள்வி இதன் மூலம் எத்தனை பேருக்கு வேலை கிடைக்கும் என்பது தான் ” என மே தின நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்