முதல்வர் தலைமையில் நடந்த திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்… தொண்டர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்!
ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தபட்சம் 10 நிமிடங்களாவது கழகத்தினர் கலந்துரையாடுவதை உறுதி செய்ய வேண்டும் என தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கியுள்ளார்.

சென்னை: தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தலைமையில், ஜூலை 17, 2025 அன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக கட்சியை வலுப்படுத்துவது மற்றும் உறுப்பினர் சேர்க்கை இயக்கத்தை தீவிரப்படுத்துவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
முதலமைச்சர் ஸ்டாலின், கட்சி உறுப்பினர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கினார், மேலும் தமிழக மக்களிடம் திமுகவின் கொள்கைகளை எடுத்துச் செல்வதற்கு ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார். மு.க. ஸ்டாலின், கூட்டத்தில் பேசுகையில், “தமிழ்நாட்டு முன்னேற்றத்தில் ஓரணியில் உழைக்கும் ஒவ்வொரு கழக உடன்பிறப்புக்கும் என் தலை தாழ்ந்த வணக்கமும், நன்றியும். ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தபட்சம் 10 நிமிடங்களாவது கழக உறுப்பினர்கள் சென்று மக்களுடன் கலந்துரையாட வேண்டும். இது, மக்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும்,” என்று கூறினார்.
மேலும், திமுகவின் பூத் டிஜிட்டல் ஏஜெண்ட்களை கட்சியின் மிகப்பெரிய சொத்து என்று பாராட்டினார். இவர்கள், கட்சியின் செயல்பாடுகளை மக்களிடம் திறம்பட எடுத்துச் செல்வதில் முக்கிய பங்கு வகிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.அடுத்த 30 நாட்களில், தமிழகத்தில் உள்ள 68,000 வாக்குச் சாவடிகளிலும், 2.5 கோடி பேரை கழக உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும் என்று ஸ்டாலின் மாவட்ட செயலாளர்களுக்கு இலக்கு விதித்தார்.
“இந்த உறுப்பினர் சேர்க்கை இயக்கம், கட்சியை வலுப்படுத்துவதற்கு மட்டுமல்ல, மக்களிடம் நமது கொள்கைகளையும், தமிழகத்தின் உரிமைகளையும் எடுத்துச் செல்வதற்கு முக்கியமானது,” என்று அவர் வலியுறுத்தினார். ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் திமுகவின் இருப்பை உறுதி செய்யவும், மக்களின் குறைகளைக் கேட்டு, அவர்களுக்கு தீர்வு காணவும் கட்சி உறுப்பினர்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.மு.க. ஸ்டாலின், ஒன்றிய பாஜக அரசு மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தமிழகத்திற்கு இழைத்து வரும் அநீதிகளை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
“மத்திய பாஜக அரசு, தமிழகத்தின் உரிமைகளை பறிக்க முயல்கிறது. அதிமுக, பாஜகவுடன் கூட்டணி வைத்து, தமிழக மக்களுக்கு எதிராக செயல்படுகிறது. இந்த அநீதிகளை ஒவ்வொரு குடும்பத்திடமும் எடுத்துச் செல்ல வேண்டும். திமுக மட்டுமே தமிழகத்தின் உரிமைகளைப் பாதுகாக்க முடியும் என்பதை மக்களுக்கு உணர்த்த வேண்டும்,” என்று அவர் தெரிவித்தார். இந்த முயற்சிகள், 2026 தேர்தலில் திமுகவின் வெற்றியை உறுதி செய்யும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில், திமுகவின் மூத்த தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள், மற்றும் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். உறுப்பினர் சேர்க்கை இயக்கத்தை தீவிரப்படுத்துவதற்கு மாவட்ட வாரியாக உத்திகள் வகுக்கப்பட்டன. மேலும், பாஜக மற்றும் அதிமுகவின் “தமிழக விரோத” நடவடிக்கைகளை எதிர்க்க, மக்கள் மத்தியில் விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
“நடந்து முடிந்த குரூப் – 4 தேர்வை ரத்து செய்துவிட்டு, மறு தேர்வு நடத்த வேண்டும்” – தவெக பொதுச்செயலாளர்.!
July 17, 2025
எரிபொருள் சப்ளை ஸ்விட்சுகளை கேப்டன் ஆஃப் செய்தாரா? – இந்திய விமானிகள் சங்கம் கண்டனம்.!
July 17, 2025