நாளை திமுக பொதுக்குழுக் கூட்டம்.! இன்று மாலை பிரமாண்ட ரோடு ஷோ நடத்தும் மு.க.ஸ்டாலின்.!
மதுரையில் நாளை திமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், இன்று மதுரை பெருங்குடி முதல் ஆரப்பாளையம் வரை ரோடு ஷோவில் பங்கேற்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

மதுரை : ஜூன் 1-ஆம் நாள் மதுரையில் திமுக பொதுக்குழுக் கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. கடந்த மே3 ம் தேதி நடைபெற்ற திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், நாளை 4 ஆண்டுகால திமுக ஆட்சியின் திட்டங்கள் குறித்து 1,244 இடங்களில் கூட்டம் நடத்தவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நாளை மதுரையில் திமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், இன்று மதுரை செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை நடைபெறும் ரோடு ஷோவில் பங்கேற்கிறார். மதுரை பெருங்குடி முதல் ஆரப்பாளையம் வரை சுமார் 17 கி.மீ. தொலைவுக்கு ரோடு ஷோ நடக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ரோடு ஷோவின் போது, மதுரை மாநகராட்சியின் மதுரா கோட்ஸ் பாலம் அருகே முன்னாள் மேயர் முத்துவின் சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைக்கிறார். மதுரையில் நாளை நடைபெறவிருக்கும் திமுக பொதுக்குழு கூட்டத்தில், 2026 தேர்தலுக்கு முன்னதாக கட்சியில் முக்கிய மாற்றங்களை செய்ய திமுக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாற்றங்களின் ஒருபகுதியாக திமுகவில் 5 பேர் துணை பொதுச் செயலாளர்களாக இருக்கும் நிலையில், அந்த எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அதேபோல், உதயநிதிக்கு முக்கிய பொறுப்பு வழங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த கூட்டம் மதுரை-திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள உத்தங்குடியில் 20 ஏக்கர் நிலப்பரப்பில் நடைபெற உள்ளது. இந்த இடத்தில் 10,000 பேர் அமரக்கூடிய மாபெரும் பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது. பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களுக்கு தனித்தனி நுழைவு வாயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேடையில் 75 முதல் 100 முக்கியப் பிரமுகர்கள் அமரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.