விவசாயிகளை ஏமாற்றுவதில் திமுக வல்லவர்கள்...பட்ஜெட்டில் ஒன்னு இல்லை..இபிஎஸ் காட்டம்!

அத்திக்கடவு அவினாசி திட்டம்போல் ஒரு திட்டத்தையும் திமுக அரசு கொண்டுவரவில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி பேசியுள்ளார்.

edappadi palanisamy Tamil Nadu Agriculture Budget

சென்னை :தமிழக சட்டப்பேரவையில் இன்று எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தமிழக வேளாண் பட்ஜெட் 2025 – 2026-ஐ தாக்கல் செய்தார். கரும்பு சாகுபடிக்கு ரூ. 10.63 கோடி செய்யப்பட்டுள்ளதாகவும், மலர் சாகுபடிக்கு ரூ.8 கோடி எனவும் முக்கிய விஷயங்களை தெரிவித்திருந்தார்.

இந்த சூழலில், ஏற்கனவே, நேற்று தாக்கல் செய்த பொதுபட்ஜெட் வெறும் பேப்பர் போல இருக்கிறது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார். அதனை தொடர்ந்து இன்றும் அதைபோலவே, இன்று அறிவிக்கப்பட்ட வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் அறிவிப்பு இல்லை என குற்றம்சாட்டி பேசியிருக்கிறார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி ” இப்போது தாக்கல் செய்யப்பட்டிருக்கும் இந்த பட்ஜெட்டில் புதிதாக எந்த அறிவிப்பும் வரவில்லை. விவசாய மக்களை திமுக அரசு இந்த பட்ஜெட் மூலம் ஏமாற்றியுள்ளது.

விவசாயிகளை ஏமாற்றுவதில் திமுக வல்லவர்கள் என்பதை இந்த பட்ஜெட் சொல்கிறது. விவசாயிகளுக்கென தனியாக உருவாக்கப்பட்ட வேளாண் பட்ஜெட் போலியானது. இந்த பட்ஜெட்டை திமுக பலத் துறைகளை ஒன்றிணைத்து அவியல் கூட்டுப் போன்று ஒரு வேளாண் பட்ஜெட் அறிவித்துள்ளனர். விவசாயிகள் பயன் பெரும் வகையில் எதாவது அறிவிப்பு வந்திருக்கிறதா?  அப்படி எதுவுமே இல்லை.

வேளாண் நிதிநிலை அறிக்கை என ஒன்றை தயாரித்து பேரவையில் அதை 1.45 மணி நேரம் வாசித்ததே இவர்களின் சாதனை. முளைக்காத விதை, உபயோகமற்ற உயிர் உரங்கள் என இவர்கள் தவறு செய்வதற்கான வசதியான திட்டங்களை தவிர, விவசாயிகளுக்கு பயன்படும் எந்த திட்டமும் பட்ஜெட்டில் இல்லை.

திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் நெல், கரும்பு உற்பத்தி குறைந்துவிட்டது. அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் தான் இந்த பட்ஜெட்டில் பல உள்ளன.முன்னதாக சாகுபடி பரப்பை 75 சதவிகிதமாக உயர்த்துவதாக கூறினார்கள். ஆனால் இதுவரை 37.7 சதவிகிதமாகவே உள்ளது.  அத்திக்கடவு அவினாசி திட்டம் போல் ஒரு திட்டத்தை கூட திமுக கொண்டு வரவில்லை” எனவும் தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து பேசிய அவர் ” முன்னதாக திமுக தேர்தல் அறிக்கையில் நிதி மேலாண்மை என்றொரு குழு அமைக்கப்பட்டது. அந்த அறிக்கை என்ன சொன்னது என எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை. அந்த குழு எப்போது அமைக்கப்பட்டதோ அப்போது தான் தமிழ்நாடு அரசு அதிக அளவில் கடன் வாங்கியுள்ளது. இந்த அரசு கடனில் மூழ்கிக்கொண்டுள்ளது. இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் முதல் மாநிலமாக தமிழ்நாடு உருவாகி உள்ளது எனவும், இதுதான் ஸ்டாலின் அரசின் பெருமை” எனவும் சற்றுகாட்டத்துடன் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.