தினசரி கொரோனா பாதிப்பில் சென்னையை முந்திய கோவை...!அச்சத்தில் மக்கள்..!

In Tamil Nadu, the Coimbatore district ranks first behind Chennai in daily corona impact.

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பில் சென்னையை பின்னுக்குத்தள்ளி கோவை மாவட்டம் முதலிடத்தில் உள்ளது.இதனால்,கோவை மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம் தீவிரமடைந்துள்ள நிலையில்,தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலில் உள்ளது.மேலும், கொரோனா தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

எனினும்,தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 33,764 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும்,நேற்று ஒரே நாளில் 475 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தை பொறுத்தவரை தினசரி கொரோனா பாதிப்பில் இதுவரை சென்னை முதலிடத்தில் இருந்தது.ஆனால்,தற்போது சென்னையை விட கோவை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.அதாவது,சென்னையில் நேற்று மட்டும் 3,561 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ள நிலையில்,கோவை மாவட்டத்தில் புதிதாக 4,268 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும்,கோவை மாநகராட்சிப் பகுதிகளில் கிட்டத்தட்ட 60% பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதன்காரணமாக,சென்னையில் கடைபிடிக்கப்படும் கொரோனா தடுப்பு நெறிமுறைகளானது,கோவை மாவட்டத்திலும் பின்பற்றப்பட்டு வருகின்றன.மேலும்,மாவட்ட ஆட்சியர் மற்றும் சென்னையில் இருந்து வந்துள்ள சுகாதார அதிகாரிகள் இணைந்து தற்போது காந்திபுரம்,எம்.ஜி.ஆர்.மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்து வருகின்றனர்.

இருப்பினும்,கொரோனா தொற்றானது தொடர்ந்து அதிகரித்து வருவதால் கோவை மக்கள் அச்சத்தில் உள்ளனர்.