சென்னை :அதிமுக மூத்த தலைவர் கே.ஏ. செங்கோட்டையன், செப்டம்பர் 5, 2025 அன்று கோபிசெட்டிப்பாளையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து, கட்சியில் இருந்து பிரிந்தவர்களை மீண்டும் இணைக்க வேண்டும் என்று எடப்பாடி கே. பழனிசாமிக்கு 10 நாட்கள் கெடு விதித்தார். “மறப்போம், மன்னிப்போம் என்ற அடிப்படையில், ஓ. பன்னீர்செல்வம், வி.கே. சசிகலா, டி.டி.வி. தினகரன் ஆகியோரை கட்சியில் இணைக்க வேண்டும். இது தொண்டர்களின் விருப்பமாக உள்ளது,” என்று அவர் கூறினார்.
இந்த அறிவிப்பு, 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னாக கட்சியை வலுப்படுத்தும் முயற்சியாக பார்க்கப்பட்டது. இருப்பினும், இந்தக் கூற்று தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஓ. பன்னீர்செல்வம் மற்றும் டி.டி.வி. தினகரன் ஆகியோர் செங்கோட்டையனின் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்தனர், அதேநேரம் இபிஎஸ் ஆதரவாளர்கள் இதை கட்சி ஒழுக்கத்திற்கு எதிரான செயலாக விமர்சித்தனர்.
செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் 1,000-க்கும் மேற்பட்டோர் பொறுப்புகளை ராஜினாமா செய்தனர். இந்த விவகாரம் குறித்து அரசியல் தலைவர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்து வருகின்றனர், இது அதிமுகவின் உட்கட்சி இயக்கவியலை மேலும் சிக்கலாக்கியுள்ளது. அரசியல் தலைவர்களிடம் இது குறித்து கேள்விகள் கேட்கப்பட்டு வரும் நிலையில், காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இது குறித்து கேள்வி கேட்கப்பட்டபோது இது குறித்து பேசியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர் ” இரண்டு திமுக தொண்டர்கள் சந்தித்தால் கட்சிப் பணி குறித்து பேசுவார்கள். அதே இரு அதிமுக தொண்டர்கள் சந்தித்தால் இருவரும் பேசாமல், எந்த கோஷ்டியை சேர்ந்தவர்களாக இருப்பார்கள் என அவர்களுக்குள் சந்தேகம் இருக்கும் உலகத்திலேயே தங்கள் கட்சி சிக்கல்களுக்காக இன்னொரு கட்சித்தலைவரை பஞ்சாயத்து செய்ய அழைக்கும் அதிமுகவினரை போன்ற நிலைமை வேறு யாருக்கும் வரக்கூடாது” என கூறியுள்ளார்.
