திராவிடம் இல்லாத கட்சி என்ன கட்சி ?சீரும் தினகரன் ஆதரவு....

டி.டி.வி.தினகரன் மதுரை மேலூரில் கடந்த 15-ம் தேதி, `அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்' என்ற பெயரில் புதிய அமைப்பு ஒன்றை அறிவித்தார். 108 அடி உயர கொடிக் கம்பத்தில்

டி.டி.வி.தினகரன் மதுரை மேலூரில் கடந்த 15-ம் தேதி, `அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்’ என்ற பெயரில் புதிய அமைப்பு ஒன்றை அறிவித்தார். 108 அடி உயர கொடிக் கம்பத்தில் கட்சியின் கொடியை ஏற்றியபோதும் மேடையில் கட்சியின் நிர்வாகிகள் பேசியபோதும், அந்தக் கூட்டத்தில் நாஞ்சில் சம்பத்தின் முகம் தென்படவில்லை.

திகார் சிறையில் தினகரன் அடைக்கப்பட்ட காலத்திலிருந்து மாவட்டம்தோறும் கூட்டங்களை நடத்தி வந்த சம்பத், புதிய கட்சியின் தொடக்க விழாவில் தென்படாமல் இருந்ததை ஆச்சர்யத்துடன் கவனித்தனர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் தொண்டர்கள்.இது குறித்து சம்பத்தின் ஆதரவாளர்கள் கூறியதாவது;

குரங்கணி தீ விபத்தில் அவருடைய உறவினர் இறந்துவிட்டதால் வரவில்லை என்பதுதான் வெளியில் சொல்லப்படும் தகவல். ஆனால், கடந்த சில நாள்களாக தினகரனுடன் அவருக்கு மோதல் வலுத்து வருகிறது. புதிய அமைப்பின் தொடக்கவிழா ஏற்பாட்டின்போது, `மேடையில் தலைவருக்கு மட்டும்தான் இருக்கை போடப்பட்டுள்ளது. நீங்கள் விருப்பப்பட்டால், முன்வரிசையில் அமரலாம்’ என கூறிவிட்டனர். இதில் மிகுந்த கோபத்துக்கு ஆளாகிவிட்டார் சம்பத்.

மேலூர் கூட்டத்துக்கு வருமாறு பத்து முறைக்கும் மேல் அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஒரு கட்டத்தில், போனை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டார். கட்சிப் பெயரில் திராவிடம் இல்லாமல் இருப்பதை அவர் விரும்பவில்லை.

அம்மா கொடுத்த இன்னோவோ காரை, தலைமைக் கழகத்தில் ஒப்படைத்துவிட்டார். கார் இல்லாமல்தான் வெளியூர்களுக்குப் பயணிக்கிறார். அவருக்கு ஒரு வாகனம் வாங்கித் தர வேண்டும் என்ற எண்ணம்கூட தினகரன் தரப்பினருக்குத் தோன்றவில்லை.

புதிய அமைப்பில் கொள்கை பரப்புச் செயலாளர் பதவியை அவருக்குத்தான் கொடுக்க வேண்டும். அதைப் பற்றியும் எந்தத் தகவலும் இல்லை. தமிழ்நாடு முழுக்க பேச்சுப் பயிற்சியை வளர்க்கும் பணி ஒன்றைச் செய்யவிருக்கிறார். அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார். `திராவிடம் என்ற பெயர் இல்லாமல் கட்சி இருக்கலாமா? இதற்குத்தான் நான் வரவில்லை. நான் வெளியில் போகவில்லை; மிகுந்த மனவருத்தத்தில் இருக்கிறேன்’ என எங்களிடம் தெரிவித்தார் சம்பத் என்று கூறினர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.