இன்று பள்ளி மாணவர்களுக்கு 2ஆம் கட்டமாக பரிசு வழங்குகிறார் விஜய்!
10, 12ஆம் வகுப்பில் முதல் 3 மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு விஜய் இன்று பரிசு வழங்குகிறார்

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய், பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி கௌரவித்து வருகிறார். இந்த ஆண்டு மூன்று கட்டங்களாக நடைபெறும் இந்த விழாவின் முதல் கட்டம் மாமல்லபுரத்தில் மே 30 அன்று நடைபெற்றது, அங்கு 88 தொகுதிகளைச் சேர்ந்த 600 மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இரண்டாம் கட்டமாக, ஜூன் 4 (இன்று) மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெறும் விழாவில், ஈரோடு, திருச்சி, ராமநாதபுரம், புதுச்சேரி உள்ளிட்ட 13 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு விஜய் பரிசுகள் வழங்குகிறார். இந்நிகழ்ச்சியில் மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவருக்கு வைர மோதிரமும், மற்றவர்களுக்கு தங்க நாணயங்களும் வழங்கப்பட உள்ளன.
இந்த விழாவில் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோருக்கு 24 வகையான சைவ உணவுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன, மேலும் அழைப்பிதழ் மற்றும் QR கோடு மூலம் நுழைவு கட்டுப்படுத்தப்படுகிறது. விஜய்யின் இந்த முயற்சி, கல்வியில் சாதனை புரிந்த மாணவர்களை ஊக்குவிப்பதோடு, அவர்களின் எதிர்கால இலக்குகளை அடைய உத்வேகம் அளிக்கிறது.
ஏற்கனவே, முதற்கட்டமாக நடந்த விழாவில் விஜய், “நீட் தேர்வு மட்டுமே உலகம் இல்லை, பல துறைகளில் சாதிக்க வாய்ப்புகள் உள்ளன” என்று கூறி, மாணவர்களை தங்கள் விருப்பத் துறைகளில் முன்னேற ஊக்கப்படுத்தினார்.அதனை தொடர்ந்து இன்று என்ன பேசப்போகிறது என்கிற எதிர்பார்ப்புகளும் எழுந்துள்ளது.