துரோக கூட்டணியை வீழ்த்துவோம்! துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
முதலமைச்சரின் திட்டங்களை எடுத்துக்கூறி மக்களை சந்தித்து வருகிறோம் எனவும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை : மாவட்டத்தில் இன்று நடைபெற்ற பாக முகவர்கள் கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பல விஷயங்களை பற்றி பேசினார். உதாரணமாக பாஜக மற்றும் அதிமுக குறித்து சில விஷயங்களை பேசினார். உதாரணமாக இந்த தேர்தல் இல்லை, 2035 தேர்தலிலும் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என திட்டவட்டமாக தெரிவித்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர் ” பா.ஜ.க என்ற சுத்தியல் இந்தி திணிப்பு, மொழி உரிமை பறிப்பு, நிதி உரிமை மறுப்பு Delimitation என எவ்வளவு ஓங்கி, ஓங்கி தலையில் அடித்தாலும் ஒருநாளும் தமிழர்களின் இதயத்தை திறக்கவே முடியாது.
தொட்டுக்கூடப் பார்க்க முடியாது. இதற்கு காரணம் தமிழ்நாட்டின் இதயத்தை தொடுகிற சாவியை பேரறிஞர் அண்ணாவும், முத்தமிழறிஞர் கலைஞரும் நம்முடைய முதலமைச்சரின் கையில் ஒப்படைத்துச் சென்று இருக்கிறார்கள்” என தெரிவித்தார். அதனை தொடர்ந்து, ” அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர் இரண்டு மாதங்களுக்கு முன்பு, 4 கார் மாறி ஒளிந்து மறைந்து போய் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்திருக்கிறார். இந்த துரோக கூட்டணியை வீழ்த்த வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் இருக்கிறது” எனவும் தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து திமுகவின் ‘ஓரணியில் தமிழ்நாடு’ திட்டம் குறித்த எடப்பாடி வைத்த விமர்சனத்திற்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய அவர் ” உங்களைப் போல அமித்ஷா வீட்டுக் கதவையோ, கமலாலயத்தின் கதவையோ திருட்டுத்தனமாக தட்டவில்லை. அரசுத் திட்டங்களை எடுத்துக்கூறி தைரியமாக மக்களைச் சந்தித்து வருகிறோம்” என கூறினார்.
மேலும் தொடர்ந்து அவர் பேசுகையில் “மிஸ்ட் கால் கொடுத்து கட்சியில் ஆட்களை சேர்க்கும் கட்சி நாம் கிடையாது. சொந்த காலில் நிற்கும் கட்சி தி.மு.க. தேர்தலுக்கான நாம் உறுப்பினர்களை சேர்க்கவில்லை. தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்க ’ஓரணியில் தமிழ்நாடு’ என்ற கழகத்தின் கீழ் உறுப்பினர்களை நாம் சேர்த்துக் கொண்டு இருக்கிறோம்” எனவும் தெரிவித்தார். கடைசியாக “நம் தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிக மிக நலமுடன் உள்ளார். மருத்துவர்களின் மருத்துவத்தினால் மட்டுமல்ல, மக்கள் மற்றும் கழகத்தினரின் பேரன்பினால் தலைவர், இரண்டு நாட்களில் வீடு திரும்புவார்” எனவும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.