சீமான் வீட்டு காவலாளிகளுக்கு மார்ச் 13ம் தேதி வரை நீதிமன்ற காவல்!
நீதிமன்றத்தின் நுழைவாயில் திறக்கப்படவில்லை என்றால் பூட்டை உடைத்து உள்ளே செல்வோம் என நாதக வழக்கறிஞர்கள் ஆவேசமாக பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை : சீமான் வீட்டில் போலீசாரை தாக்கிய விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சீமான் வீட்டு காவலாளிகள் அமல்ராஜ், சுபாகர் ஆகிய இருவரையும் மார்ச் 13ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க சோழிங்கநல்லூர் நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.
நடிகை விஜயலட்சுமி பாலியல் புகார் தொடர்பான நேரில் ஆஜராக சீமான் வீட்டில் போலீசார் சம்மன் ஒட்டியுள்ளனர். இதை வீட்டில் இருந்த காவலாளி உள்ளிட்ட இருவர் கிழித்தெறிந்தனர். இதை விசாரிக்க சென்ற போலீசாரையும் அவர்கள் தாக்க முற்பட்டதால், இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இதனையடுத்து, நேற்றிரவு சோழிங்கநல்லூர் நீதிமன்றத்தில் சீமான் வீட்டு காவலாளி உள்பட 2 பேரும் நேரில் ஆஜர் படுத்தப்பட்டார். அந்த 2 பேருக்கும் மார்ச் 13ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. அப்பொழுது, நீதிமன்றத்தின் நுழைவாயில் திறக்கப்படவில்லை என்றால் பூட்டை உடைத்து உள்ளே செல்வோம் என நாதக வழக்கறிஞர்கள் ஆவேசமாக பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சீமான் வீட்டில் களேபரம்
சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என அவரது வீட்டில் சம்மன் அறிக்கை நேற்று ஒட்டப்பட்டது. அந்த சம்மனை ஒருவர் கிழித்துவிட்டார். அதுகுறித்து விசாரணை செய்ய வளசரவாக்கம் போலீசார் சீமான் வீட்டிற்கு சென்ற போது, அங்கு பாதுகாவலர் பணியில் இருந்த முன்னாள் ராணுவ வீரர் அமல்ராஜுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதில் அமல்ராஜ், தான் வைத்திருந்த துப்பாக்கியை போலீசாரிடம் நீட்டியதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அமல்ராஜை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.
சீமானுக்கு மீண்டும் சம்மன்
நடிகை விஜயலட்சுமி பாலியல் புகார் வழக்கில், இன்று நேரில் ஆஜராக சீமானுக்கு நேற்று சம்மன் அனுப்பப்பட்டது. சீமான் இன்று காலை 11 மணி அளவில் சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என அவரது சம்மனில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இன்றயை விசாரணைக்கு ஆஜராகாவிட்டால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விசாரணைக்கு ஆஜராக முடியாது
“இன்று தர்மபுரியில் கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்க போகிறேன். இதனால் விசாரணைக்கு ஆஜராக முடியாது, என்ன செய்வீர்கள்? வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராக்குவதற்கு என்ன அவசரம்? நீங்க கூப்பிட்டதும் நான் தான் வருவேன்ல. ஏற்கனவே வந்திருக்கேன்ல? இதெல்லாம் நான் அசிங்கபட போறேனு செய்யுறீங்களா? சரி, நாளைக்கு இல்லைனா நாளை மறுநாள வரப்போறேன். நாளைக்கு வரவில்லை என்றால் என்ன செய்வீங்க? நான் இங்க தானே இருக்கேன். எங்கேயும் ஓடி ஒளியவில்லை” என்று கூறியுள்ளார் சீமான்.
லேட்டஸ்ட் செய்திகள்
“என்னால் பிரச்னை வேண்டாம் என நினைக்கிறேன்” – துரை வைகோ.!
April 19, 2025